முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதாவரி –காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறும்போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையே இருக்காது : கரூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கரூர் : இந்திய அளவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து 7வருடம் தமிழகம் தான் முதலிடம் என்றும், கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறும் போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையே இருக்காது என்றும் கரூர் அருகே நடைபெற்ற உழவன் திருவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

கரூரில் நடைபெற்ற உழவன் திருவிழா மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.கரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் கரூர்-வாங்கல் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தில் உழவன் திருவிழா மற்றும் மாநாடு நடந்தது.இந்த மாநாட்டில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் கலந்துகொண்டு விவசாயிகளின் பாராட்டை ஏற்று சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நான் ஒரு விவசாயி என்பதை விட, நாட்டிற்கே சோறு போட்டு, தன் வியர்வையும் ரத்தத்தினையும் கொண்டு உழுது அதன் மூலம், விவசாயம் செய்து மற்றவர் பசியை போக்கும் ஒரு விவசாயியிடம் நான் பாராட்டு பெறும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், தமிழகத்தில் 6 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.300 கோடி மூலதன நிதி வழங்கிய அரசு இந்த அ.தி.மு.க அரசு என்று தெரிவித்தார்.. 

இங்குள்ள அமைச்சர்கள் ஏற்கனவே புகளூர் பகுதியில் கதவணை வேண்டுமென்கின்ற கோரிக்கை வைத்தனர். தற்போது அந்த திட்டம் சுமார்  406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த திட்டத்தினை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றார். அதே போல, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் 412 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதே போல தான் அத்திக்கடவு அவினாசி திட்டம் நீண்ட காலமாக இருந்த நிலையில் தற்போது நிறைவேறி வருகின்றது. முழுக்க முழுக்க மாநில நிதி பெற்று சுமார் 1700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும் என்றார். அதுமட்டுமில்லாமல் நமது அதிமுக அரசு குடிமராமத்து திட்டம் என்கின்ற திட்டம் முழு தீவிரமாக நடைபெற்று கோடை காலங்களில் நீரை சேமித்து விவசாயிகளுக்கும், குடிக்கவும் நீர் கொண்டு வந்துள்ளதாகவும், தமிழகத்தில் சுமார் 14 ஆயிரம் ஏரிகள் பொதுப்பணித்துறை வசம் உள்ளது. 26 ஆயிரம் ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளாட்சி துறையின் வசம் உள்ளது ஆகையால் அதன் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு குடிமராமத்து திட்டம் மூலம் சிறப்பான திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. 

அதே போல, கோதாவரி, காவிரி திட்டம் நமது லட்சிய திட்டம் அந்த திட்டத்தினை நிச்சயம் நிறைவேற்றியே தீர்வோம். இந்த திட்டம் நிறைவேற்றும் போது, தண்ணீர் பஞ்சம் நிச்சயம் தீரும், ஆகையால் ஆந்திரா , தெலுங்கானா முதலமைச்சரை பார்க்க இரண்டு அமைச்சர்களை நியமித்து உள்ளேன் என்று கூறிய முதல்வர், நிச்சயம் இந்த திட்டத்தினை நிறைவேற்றியே தீர்வேன் என்றார். தற்போது தூர்வாரியதால் தான் கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்கின்றது ஆகையால் தான் கடந்த ஆண்டு 32 லட்சத்து 42 ஆயிரம் மெட்ரிக் டன், கொள்முதல் செய்து வரலாற்று சாதனை பிடித்த வெற்றி என் அரசிற்கு உண்டு என்றார்.

ஒவ்வொரு வருடமும் 28 லட்சம் மெட்ரிக் டன்னிற்கு மேல் நெல் கொள்முதல் செய்யாது., ஆனால் தொடர்ந்து கடந்த 7 வருடங்களாக உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதே போல, நுண்ணுயிர் பாசன திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,893 கோடி ரூபாய் மானியம் கொடுத்துள்ளதாகவும், 7.47 லட்சம் ஹெக்டர் பாசனம் பெற்றுள்ளதாகவும், இதன் மூலமாக 7 லட்சத்து 13 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

விவசாயிகள் விவசாயத்தினை குறித்து தெரிந்து கொள்ள, உழவன் செய்தி அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருவதாகவும், தமிழகம் முழுவதும் நீர்மேலாண்மையினை மேம்படுத்த 2 ஓய்வு பெற்ற பொறியாளர்கள் கொண்டு சிறப்பான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் முதல்வர் கூறினார். முன்னதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து