முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Alagar-Mdu-2024-04-26

மதுரை, சித்திரை திருவிழா  நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு கள்ளழகரை  தரிசனம் செய்தனர். 

சித்திரையில் முத்திரை பதிக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடை பெற்றது. முத்தாய்ப்பாக கடந்த 21-ம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக் கல்யாணமும், 22-ம் தேதி தேரோட்டமும் நடந்தது.

அதோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிவுக்கு வந்த நிலையில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. கடந்த 21-ம் தேதி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் மதுரைக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் 450-க்கும் மேற்பட்ட மண்டகடப்படிகளில் எழுந்தருளி கள்ளழகர் அருள்பாலித்தார்.

மறுநாள் 22-ம் தேதி புதூரில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் கள்ளழகர் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. 

தொடர்ந்து 23-ம் தேதி அதிகாலை கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி காலை 6 மணி யளவில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்று மதியம் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 

இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவு முழுவதும் அங்கு திருவிழா களைகட்டியது. 24-ம் தேதி காலை சேஷ வாகனத்தில் அருள்பாலித்த கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனி வருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார கோலத்தில் கள்ளழகர் காட்சி அளித்தார்.

அதை தொடர்ந்து நேற்று முன்தினம் (25-ம் தேதி) காலை மோகினி அலங்காரத்தில் பக்தி உலா நடந்தது. பின்னர் ராஜாங்க அலங்காரத்தில் அருள் பாலித்த கள்ளழகர் தடம் பார்க்கும் நிகழ்வுக்காக மீண்டும் வைகையாற்று பகுதியில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

நேற்று முன்தினம் இரவு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு வந்த கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்பாடானார். 

காலையில் மூன்று மாவடி, ரேஸ் கோர்ஸ், தாமரை தொட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர். அப்போது சர்க்கரை தீபம் ஏந்தி வழி பட்டனர். வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகரை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டுகளித்தனர்.

அதை தொடர்ந்து அப்பன் திருப்பதி கோவிலில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர் மலையை இன்று 27-ம் தேதி சென்றைடைகிறார்.  இதனை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா நிறைவுபெற்றது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து