முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரிநீர் பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழகஅரசு வழக்கு

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, செப். - 27 - தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட மறுத்ததால் குறுவை சாகுபடி கைவிடப்பட்டது. தற்போது சம்பா சாகுபடிக்காக தமிழகம் நீர் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. மேலும் பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டவும் தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இதையடுத்து பிரதமர் அலுவலகத்திற்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டும் தேதியை அறிவிக்க உத்தரவிட்டது. பின்னர் பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. அடி தண்ணீர் வீதம் 24 நாட்களுக்கு காவிரி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் வீதம், 20.9.2012 முதல் 15.10.2012 வரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று பிரதமரும் உத்தரவிட்டார். ஆனால் இந்த நீர் போதுமானது அல்ல என்று கூறி முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கவில்லை. கர்நாடக அரசும் நீரைத் திறந்து விட மறுப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகம் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், காவியில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகம் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கக் கோரும் மனுவினை உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனால் காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்தது. அதில், நாள் ஒன்றுக்கு 2 டி.எம்.சி. வீதம் 24 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடவேண்டும். வறட்சி காலங்களில் தமிழகத்தின் பங்கை விதிமுறைப்படி வழங்க காவிரி நதிநீர் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகுர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வரும் 28 ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்