முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 2 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 2 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:- தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி மக்கள் நல்வாழ்வுத் துறையால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 1386 மருத்துவ முகாம்களின் மூலம் இதுவரை 84,436 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து விநியோகிக்கப்படுவதை சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குளோரின் பரிசோதனை குழுக்கள் தொடர்ந்து உறுதி செய்கின்றன.

குடிநீரில் குளோரின் சோதனை செய்வதற்காக 15000 எண்ணிக்கையிலான குளோரின் அளவினை காட்டும் கிட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயன்படுத்தும் நிலையில் குடிநீரில் குளோரின் அளவு 0.5 பி.பி.எம் அளவிற்கும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் 2.0 பி.பி.எம் அளவிற்கும் இருப்பதை இக்குழுக்கள் உறுதி செய்யும். நோய் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், புகை மருந்து அடிக்கவும், கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கவும் பொது சுகாதாரத் துறை தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. பொதுமக்களுக்கு மழையின் பொழுதும், மழைக்குப் பின்பும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகள் அடங்கிய 5 லட்சம் எண்ணிக்கையிலான துண்டு பிரசுரங்கள்விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள இணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தேவையின் அடிப்படையில் மருத்துவம் / மருத்துவம் சாரா அவசர நிலையினை சமாளிக்க ஏதுவாக ரூ. 5 லட்சம் வரையில் செலவு செய்திட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்பட்டு தங்கு தடையின்றி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை உரிய நேரத்தில் வழங்குவது உறுதி செய்யப்படும். கடந்த இரண்டு நாட்களில் 2 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் காலம் வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பும் வரையில் மேற்காணும் பணிகள் மக்கள் நல்வாழ்வுத்துறையால் எவ்வித சுணக்கம் இல்லாமல் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து