முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி நிலப் பிரச்சினை: 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சமரச குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அயோத்தி நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சமரசக் குழு வரும் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி - பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக 3 நபர் சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான இந்த குழுவில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீ ராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவினர் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

இந்நிலையில், சமரசக் குழு சரியாக செயல்படவில்லை எனக் கூறி இந்து அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரன், விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும், அதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சமரசக் குழு விசாரணை நடத்தி, வரும் 25-ம்தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமரசக் குழுவை அமைத்திருப்பதாகவும், 25-ம் தேதிக்குள் அவர்கள் அறிக்கையை தாக்கல் செய்து, இணக்கமான தீர்வை பரிந்துரை செய்யாவிட்டால், அதற்கு பிறகு இந்த விவகாரத்தை நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து