முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் வேதமந்திரங்கள் முழங்க கோலாகலமாக நடந்த மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் : இன்று திருத்தேரோட்டம் நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Meenashi 2024-04-21

Source: provided

மதுரை : மதுரையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று திருத்தேரோட்டம் நடக்கிறது. 

உலக  பிரசித்தி  பெற்ற மதுரையில்  அரசாளும் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் கற்பக விருட்சம், சிம்மம், பூத, அன்ன, கைலாச பர்வதம், காமதேனு, தங்கப் பல்லக்கு, தங்கக்குதிரை, ரிஷப, நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன் றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கடந்த 19-ம் தேதி நடந்தது. அதன் தொடர்ச்சியாக பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில்  தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர்புரியும் திக்கு விஜயம் நேற்று முன்தினம் இரவு விமரிசையாக  நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி  சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். 

கோவிலுக்குள் உள்ள மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை ரூ. 30 லட்சம் செலவில், 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  காலை 7.45 மணி அளவில் முதலாவதாக திருக்கல் யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, பவளக்கனி வாய் பெருமாள் ஆகியோர் வருகை தந்தனர். 

அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினார்கள். அதன் பின்னர் திருக்கல்யாண வைபவங்கள் வேத மந்திர முழக்கங்களுடன் தொடங்கியது. 

மீனாட்சி அம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடதுபுறம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானையும் எழுந்தருளினர்.  மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி மற்றும் தங்க காசு மாலை, பச்சைக் கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபர ணங்கள் அணிந்திருந்தார். 

சுவாமி சுந்தரேசுவரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். பிரியாவிடை சிவப்பு பட்டு அணிந்திருந்தார். திருக்கல்யாண நிகழ்வு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டது. 

மேலும் சங்கல்பம், கணபதி ஹோமம், புண்ணியாக வாசனம், பஞ்சகாவியம் நவதானியமிடும் பாலிகா பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடத்தப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், மீனாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. 

அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பவளக்கனிவாய் பெருமாள், தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு தாரை வார்த்து கொடுத்தார். காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் விண்ணதிர மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மீனாட்சி அம்மனாக ஹாலாஸ்யநாதன் பட்டரும், சுந்தரேசுவரராக செந்தில் நாதன் பட்டரும் வேடம் தரித்திருந்தனர். அவர்கள் இருவரும் முதலில் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் சுந்தரேசுவரராக வேடமணிந்திருந்த செந்தில் நாதன் பட்டர், வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார்.  

அப்போது  பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர். திருமண நிகழ்ச்சியை கோவிலுக்குள் 12 ஆயிரம் பக்தர்களும் மற்றும் சித் திரை வீதி, மாசி வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கண்டுகளித்தனர்.

திருக்கல்யாணம் நடந்த போது, கோவிலின் உள்ளேயும், வெளிபுறத்திலும் திரண்டிருந்த பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்த பின்பு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு  காட்சி கொடுத்தனர். 

திருக்கல்யாணத்தை பார்த்தால் வீட்டில் திருமணமாகாத கன்னிகைகள், இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இதனால் திருக்கல்யாணத்தை காண இந்த ஆண்டும் பல்லாயிரக்கானோர் திரண்டிருந்தனர். 

திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த  பக்தர்களின்  கூட்டமாகவே காட்சி அளித்தது. 

திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு சேதுபதி பள்ளியில் கல்யாண விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் விருந்தில் பங்கேற்றவர்கள் மொய் எழுதி சென்றனர். 

திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக கோரிப்பாளையம் மீனாட்சி கல்லூரி, தெப்பக் குளம் மாரியம்மன் கோவில், காமராஜர் சாலை சவுராஷ்டிரா பள்ளி, பழைய குயவர்பாளையம் செயின்ட் மேரீஸ் பள்ளி, மதுரை கல்லூரி, எல்லீஸ் நகர் 70 அடி சாலை, அரசரடி இறையியற் கல்லூரி வளாகம் ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 

அதை தொடர்ந்து சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.  இன்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து