முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தினத்தன்று நாசவேலைக்கு சதித் திட்டம்: டெல்லியில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் ஊடுருவல் - மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சுதந்திர தினத்தன்று நாசவேலையில் ஈடுபட தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இதன் பொருட்டு டெல்லியில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் உஷார் நிலையில் உள்ளனர். தலைநகர் முழுவதும் சோதனை நடந்து வருகிறது. 

நாட்டின் 72-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார். இதையொட்டி சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளில் டெல்லி போலீசாருடன், பாதுகாப்பு படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். டெல்லி முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகள் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே 2 தீவிரவாதிகள் நாசவேலை சதி திட்டத்துடன் டெல்லியில் ஊடுருவி இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பல நாச வேலைகளில் ஈடுபட்டது. இதன் தலைவனான மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரப் அக்சார் என்பவரிடம் டெல்லியில் நாச வேலை நடத்தும் சதி திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்காக இப்ராகிம், முகமது உமர் என்ற 2 தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். இப்ராகிம் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தான். தற்போது அவன் டெல்லியை அடைந்து விட்டதாக தெரியவந்துள்ளது. இதே போல் முகமது உமரும் சமீபத்தில் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து விட்டதாகவும் அவன் டெல்லி வந்து இப்ராகிம் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து விட்டதாகவும் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இங்கு இருவரும் ரகசிய இடத்தில் தங்கி தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவதற்கான சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதிகளும் டெல்லிக்குள் நுழைந்து  இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நாச வேலையில் ஈடுபடும் சதி திட்டம் அப்துல் அன்சார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2 தீவிரவாதிகளும் மனித வெடிகுண்டாக செயல்படக் கூடியவர்கள். சாதுக்கள் வேடத்தில் இவர்கள் பாதுகாப்பு படையினரின் முகாம்களில் தாக்குதல் நடத்தவும், சுதந்திர தின விழாவில் நாச வேலையில் ஈடுபடவும் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் சோதனை நடத்தி ரகசிய இடத்தில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினரும், தீவிரவாத எதிர்ப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து