முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து 19-ல் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக வரும் 19-ம் தேதி ஆலோசிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் நிபுணர்கள் சமீபகாலமாக கருத்து தெரிவித்து வந்தனர். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இதற்கு ஒப்புதல் அளித்தால் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் கமிஷனும் கூறியிருந்தது. இது தொடர்பாக,பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேசும் போது,

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பா.ஜ.க. உள்பட பல மாநிலங்களின் ஆட்சிக்கு இழப்பு ஏற்படலாம். ஆனால் அரசியல் கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் அதை பார்க்காமல் தேசிய நலனை கருத்தில் கொண்டு இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். ஒரு கட்சியோ அல்லது ஒரு ஆட்சியோ இதை தீர்மானிக்க முடியாது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொடர்ந்து தேர்தல் நடத்துவதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ரூ.1,100 கோடிக்கு மேல் செலவு ஆனது. 2014-ம் ஆண்டு தேர்தலில் அது ரூ. 4 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டது. மேலும் பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உழைப்பு வீணாகிறது. தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் நம் தேச பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. எனவே இதற்கு தீர்வு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் என்று கூறியிருந்தார். மத்திய திட்டக்குழுவான நிதி ஆயோக் அமைப்பும் இதற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக பிறகட்சி தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அனைத்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களும் சேர்த்து நடத்த முடியாமல் போனது.

இந்நிலையில், பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் வரும் 19-ம் தேதி நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நாட்டின் எதிர்கால நலன்கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதால் உங்களது கருத்துகளை தெரிவிக்க அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து