முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிப். 1 முதல் சோதனை முறையில் அமல்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி : ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் நாடு முழுவதும் ஜூன் 1-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து இந்த இரு மாவட்டங்களில் உள்ள நியாயவிலை கடைகளில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இந்த திட்டம் செயல்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக இந்த திட்டம் முன்மாதிரியாக அமல்படுத்தப்படுகிறது.

இதனை தொடர்ந்து, அமல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் குடும்ப அட்டை தாரர்கள் அந்த மாவட்டத்துக்குள் உள்ள எந்த நியாயவிலை கடையிலும் அனைத்து பொருட்களையும் வாங்க முடியும். தொடக்க நிலையில் எந்த கடையில் எவ்வளவு பொருட்கள் வாங்குவர் என தெரியாததால் அனைத்து கடைகளுக்கும் கூடுதலாக பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வெளியூர்களில் சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் பயன் அளிக்கும். பெரும்பாலும் சொந்த ஊரிலேயே பொருட்களை வாங்கி விடுவார்கள். இதனால் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் போது நாட்டின் எந்த பகுதியிலும் பொருட்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து