முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      இந்தியா
Nirmala-Sitharaman-2024-04-

புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.

பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளில் நேற்று (ஏப்.26) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. தேர்தலில் வாக்களிக்க பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் காலை தொடங்கி பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர்.

2-ம் கட்டமாக கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தனது வீட்டிலிருந்து நடந்தே வந்து வாக்களித்துச் சென்றார். கேரள எதிர்க்கட்சித் தலைவர் விடி சுதீஷன் எர்ணாகுளத்தில் வாக்களித்தார். வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், “கேரள மக்களுக்கு பாஜகவும், காங்கிரஸும் எதுவும் செய்ததில்லை. செய்யவும் செய்யாது. இப்போதுகூட மத்தியில் ஆளும் பாஜக அரசு கேரளாவுக்கு உரிய நிதி வழங்க மறுக்கிறது” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் ஆலப்புழா தொகுதி வேட்பாளர் கேசி வேணுகோபால் வாக்களித்துவிட்டு அளித்த பேட்டியில், “ஆலப்புழா மக்கள் என்னுடன் நிற்பார்கள் என நான் நம்புகிறேன். முதற்கட்டத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடி பதற்றத்தில் உள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் பெருமளவில் கொண்டு சேர்த்தமைக்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றி சொல்கிறேன். கேரளாவில் யுடிஎஃப் 20 தொகுதிகளைக் கைப்பற்றும். வயநாட்டு மக்களும் கேரள மக்களும் நாங்கள் ராகுலின் மக்கள் என்பதை நிரூபிப்பார்கள்” என்றார்.

திரிச்சூரில் வாக்களித்த பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி, “இந்தத் தேர்தல் மக்களின் இதயங்களைப் பிரதிபலிக்கும். தேச வளச்சியில் கேரள மக்களின் பங்களிப்பு தெரியவரும். மக்கள் இதயங்கள் திரிச்சூரில் மட்டுமல்ல கேரளாவின் அனைத்துத் தொகுதிகளிலும் மலரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். கர்நாடகா மாநிலத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கை பதிவு செய்தார். இன்போசிஸ் நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தி அவரது மனைவியும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுதா மூர்த்தியும் பெங்களூருவில் வாக்களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து