முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாநில வாக்காளர்களிடம் பா.ஜ.க.வுக்கு நல்ல வரவேற்பு : மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டி

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      இந்தியா
amit-shah 1

Source: provided

கவுகாத்தி : தென் மாநில வாக்காளர்களிடம் பா.ஜ.க.வுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும். இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரும் என காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்புகிறது. வாக்காளர்களை சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. 

மக்களின் ஆதரவுடன் 400-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றும் இலக்கை நோக்கி பா.ஜ.க. சென்று கொண்டிருக்கிறது. அசாமில் உள்ள 14 மக்களவை தொகுதிகளில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும். 

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் இருப்பதை உறுதி செய்வதற்கும் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். 

மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருப்பது சரியல்ல. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டு வருவோம் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

இடஒதுக்கீடு குறித்து நான் பேசியதாக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பப்பட்டுள்ளது. மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தென் மாநிலங்களில் கள நிலவரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, தென் மாநில வாக்காளர்களிடம் பா.ஜ.க.வுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறினார். பேட்டியின் போது அமித்ஷாவுடன் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநில பா.ஜ.க. தலைவர் பாபேஷ் கலிதா ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து