முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்

சனிக்கிழமை, 4 மே 2024      தமிழகம்
sun-2023-05-01

Source: provided

சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும். 

அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. பொதுவாகவே கத்திரி வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது. 

கத்திரி வெயிலின் தாக்கம் வரும் 28-ம்  தேதி வரை நீடிக்கும். அதாவது, 25 நாட்கள் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்தாலும் அவ்வப்போது மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கோடை மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தலா ஒரு செ.மீ. கோடை மழை பெய்துள்ளது. 

அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். இதே போல, வரும் 7-ம் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து