முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் எல்லையில் 2,500 தீவிரவாதிகள்: ஜீதேந்திரசிங்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.10 - பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் சுமார் 2,500 தீவிரவாதிகள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாக பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜீதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தின் லோக்சபையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜீதேந்திரசிங் எழுத்துமூலமாக பதிலளித்தார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்த முகாம்களில் பயிற்சி முடித்த, பயிற்சி பெற்றுவரும் தீவிரவாதிகள் சுமார் 2,500 பேர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 2008 ம் ஆண்டைக்காட்டிலும் 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் அதிகரித்து உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 2009 ம் ஆண்டு 485 ஊடுருவல் முயற்சிகளும், 2010 ல் 489 ஊடுருவல் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன என்றும் 2011 ல் ஜூலை மாதம் வரை 52 ஊடுருவல் முயற்சிகள் நடந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் கடந்த 2008 ம் ஆண்டு 77 போர் நிறுத்த மீறல்களும், 2009 ல் 28 போர்நிறுத்த மீறல்களும், 2010 ல் 44 போர்நிறுத்த மீறல்களும் நடைபெற்றுள்ளன என்று தெரிவித்த ஜீதேந்திரசிங் 2011 ல் ஜூலை மாதம் வரை 19 போர் நிறுத்த மீறல்கள் நடைபெற்றுள்ளன என்றும் கூறினார். 

இந்த போர் நிறுத்த மீறல்கள் குறித்து பாகிஸ்தான் ராணுவ திகாரிகளிடம் உரிய நேரத்தில் உரிய முறையில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜீதேந்திரசிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்