முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை: மத்திய அரசு முடிவு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவை சேர்ந்த ஹான் லிக் என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு  இ-சிகரெட்டை கண்டுபிடித்தார். பார்ப்பதற்கு சிகரெட்டை போலவே இருக்கிற ஒரு மின்னணுக் கருவியான இதனுள்ளே நிகோடின் மற்றும் புரோபைலின் கிளைக்கால் திரவம் நிரப்பப்பட்ட குப்பி இருக்கும். இதைச் சூடுபடுத்தும் சிறு கருவியும் பேட்டரியும் இருக்கும். சிகரெட் புகைக்க நினைக்கும் போது, இதை வாயில் வைத்து உறிஞ்சினால் ஏற்படும் விசையால், பேட்டரி இயங்கும். அப்போது, நிகோடின் சூடேறி, புகை கிளம்பும். புகைப்பவர் இதை உள்ளிழுக்க, புகையிலை சிகரெட்டை புகைப்பது போன்ற திருப்தியை ஏற்படுத்தும். இதில், நிகோடின் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதால் இது தீங்கற்றது என்று பலரும் எண்ணுகின்றனர்.

இது சந்தைக்கு வந்த முதல் ஆண்டிலேயே 80 கோடி அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை ஆனதாக அமெரிக்க சிகரெட் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்தது. மேலும், இ-சிகரெட் எந்த வகையிலும் புற்றுநோயை ஏற்படுத்தாது. நெருப்பு இல்லை. சாம்பல் இல்லை. அதிக அளவில் புகையும் இல்லை. ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத நவீன சிகரெட் என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால், இ-சிகரெட் விளம்பரம் உண்மையல்ல. உடலில் புற்றுநோயை உண்டாக்க நிகோடின் ஒன்றே போதும். இ-சிகரெட் புகைத்து ஒருவர், சிகரெட் புகைக்கும் பழக்கத்தை விட்டு விட்டார் என்பதற்கான அறிவியல் ஆதாரமோ, மருத்துவப் புள்ளி விபரங்களோ எதுவுமில்லை என்கின்றனர் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள்.

நிகோடின் எந்த வகையில் உடலுக்குள் நுழைந்தாலும் ஆபத்துதான். இது புற்றுநோய், இதயநோய், ரத்தநாள நோய்கள் உள்ளிட்ட அபாயங்களை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இ-சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது. அதனால், சிங்கப்பூர், பிரேசில் போன்ற சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் வாசனையூட்டப்பட்ட இ-சிகெரெட் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், புகையிலை சிகரெட்டுக்கு மாற்று என்ற போர்வையில், இ -சிகரெட் புகைக்கும் பழக்கம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட 182 நாடுகளில் படுவேகமாக பரவியுள்ளது.

தற்போது, இந்தியாவின் முக்கிய நகரங்களில் இ-சிகரெட்டுலள் பலமடங்கு விற்பனையாகி வரும் நிலையில், நாடு முழுவதும் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விளம்பரம் மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்துள்ளார். நமது நாட்டில் பலர் இ-சிகெரெட் பயன்படுத்துவதாகவும் இதற்காக 400 ரகங்களில் 150 வித வாசனைகளில் இ-சிகரெட்டுகள் விற்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், இவற்றில் ஒரு ரகம்கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை எனவும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து