முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானப்படை விமானம் மாயம்: சென்னைக்கு அருகே கடலில் சந்தேகத்திற்கு இடமான பொருள் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - சென்னைக்கு அருகே கடலில் சந்தேகத்திற்கு இடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது விமானத்தின் பாகமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானில் உள்ள போர்ட்பிளேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை ஏ.என்.32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் அது சென்னைக்கு அருகே திடீரென மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுவதால் கடந்த 5 நாட்களாக அந்த விமானத்தை தேடும்பணி நடந்து வருகிறது.

தேடும் பணியை விமானப்படை, கப்பல் படை, கடலோர காவல்படை ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன.  விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதில் பிரச்சினை என்னவென்றால் இ.எல்.டி. (எமர்ஜென்சி லொக்கேட்டர் டிரான்ஸ்மிட்டர்) என்ற கருவியில் இருந்து கிடைக்க வேண்டிய சிக்னல் கிடைக்கவில்லை. அதுகிடைத்தால் மட்டுமே எங்களின் தேடும் பணி எளிதாகும். கடந்த சில விமானம் காணாமல் போன சம்பவங்களில்கூட இ.எல்.டி. கருவி வேலை செய்யவில்லை. இது கவலையளிக்கும் விஷயம். இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.  ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்களில் இ.எல்.டி. செயல்படாமல் போனது உண்மைதான்.

இதிலுள்ள குறைபாடு அதன் தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்திருக்கலாம். கடல் மட்டத்தில் இருந்து யாரையும் அல்லது விமானத்தின் பாகங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால், அடுத்ததாக கடலுக்கு அடியில் சென்று தேடும் பணியை தொடர வேண்டும் என்று கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விமானத்தை தேடும்பணியில் நீர்மூழ்கிக் கப்பலும் ஈடுபட்டு உள்ளது.  உதவிக்கு என்.ஐ.ஓ.டி. நிறுவனத்தின் கப்பல் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அது மொரிஷியசில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருக்கிறது.

கடலடியில் மேற்கொள்ளப்படும் தேடுதலுக்கு அதுவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னைக்கு அருகே வங்க கடலில் சந்தேகத்திற்கு இடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  சென்னையில் இருந்து சுமார் 145 கடல் மைல் தொலைவில் மர்மபொருள் தென்பட்டு உள்ளது என்று கடலோர காவல்படை விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சந்தேகத்திற்கு இடமான பொருள் மாயமான விமானத்தின் பாகமா என்று அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்