முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      விளையாட்டு
24-Ram-58

Source: provided

சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மோதிய ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன. மேலும் இந்திய அணி மோதும் போட்டி மட்டும் வேறு ஒரு இடங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா அணி விளையாடும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடரை மறந்து விடுங்கள் எனவும் பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

டெண்டுல்கருக்கு வாழ்த்து

சச்சின் டெண்டுல்கருக்கு நேற்று 51 - வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கிரிக்கெட் உலக வீரர்கள்,மற்றும் நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். டெண்டுல்கர் 24- 4- 1973-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். டெண்டுல்கருக்கு தற்போது 51 வயதாகிறது. கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் அழைக்கப்படுகிறார்.சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் வருமாறு :- டெண்டுல்கர் 11 வயதில் கிரிக்கெட் விளையாட்டில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவரது மூத்த சகோதரர் அஜித் டெண்டுல்கர் அவரை ஊக்குவித்தார். 1988 -ல், 15 வயதில் சச்சின் டெண்டுல்கர், குஜராத்திற்கு எதிராக ரஞ்சி டிராபி ஆட்டத்தில் பம்பாய்க்காக முதல் தடவையாக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் சதம் அடித்த அவர், முதல்தர போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ரஞ்சி டிராபி, இரானி டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகிய 3 உள்நாட்டுப் போட்டிகளிலும் அறிமுகத்திலேயே சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் இவர். டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். அவர் 664 போட்டிகளில் ஆடியுள்ளார். மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது இணையற்ற பேட்டிங் நுட்பங்களால் கிரிக்கெட் உலகில் ஜொலித்தார்.  இவரது சாதனைகளுக்காக இந்திய அரசு டெண்டுல்கருக்கு பல விளையாட்டு விருதுகளை வழங்கி கவுரவித்தது. 1994 -ல் அர்ஜுனா விருது, 1997 -ல் கேல் ரத்னா விருது, 1998 -ல் பத்மஸ்ரீ, 2008 -ல் பத்ம விபூஷன் ,2013 -ல் பாரத ரத்னா விருதுகளை பெற்றுள்ளார்.

வெற்றி பெற... பிளெமிங் கருத்து

இந்த வருடம் பேட்டிங் வரிசையில் நிலைத்தன்மை இல்லாதது சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்சமயத்தில் சென்னை அணியில் சரியான கலவையை கண்டறிவதற்கான சோதனையை நடத்துவதால்தான் இது போன்ற கசப்பான தோல்விகள் கிடைப்பதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். எனவே அது சரியாக நடந்து விட்டால் இதே வீரர்கள் ஐ.பி.எல். தொடரின் 2-வது பகுதியில் அபாரமாக விளையாடி வெற்றியில் பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இது பார்ம் மற்றும் காம்பினேஷனை கண்டறியும் முயற்சியின் கலவையாகும். சில பகுதிகளில் நாங்கள் சற்று அசவுகரியமாக உள்ளோம். அதற்காக விரைவான தீர்வை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் 2-வது பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் வீரர்களுக்கான கலவையை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். டேரில் மிட்சேல் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கீழ் வரிசை பொருந்தவில்லை என்பதால் சர்வதேச அளவில் அசத்திய அவரை மேல் வரிசையில் இறக்கினோம். இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் டாப் 3 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும். இன்று அதை செய்த ருதுராஜ் தொடர்வார் என்று நம்புகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் எங்களை வீழ்த்த எதிரணிகள் சிறப்பாக விளையாடுகின்றன. அதற்கு நாங்களும் கொஞ்சம் நன்றாக விளையாட வேண்டும்" என்று கூறினார்.

ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகள் சட்டோகிராமிலும், அடுத்த இரு போட்டிகள் டாக்காவிலும் நடைபெறுகின்றன. வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக வங்காளதேசத்திற்கு இந்த தொடர் மிகவும் உதவியாக இருக்கும். இந்நிலையில் இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 அணிக்கு சீனியர் வீரரான சிக்கந்தர் ராசா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணி விவரம்; சிக்கந்தர் ராசா (கேப்டன்), பராஸ் அகரம், பிரினா பென்னட், ரியான் பர்ல், ஜொனாதன் காம்ப்பெல், க்ரேக் எர்வின், ஜாய்லாட் கும்பி, லுக் ஜாங்க்வே, கிளைவ் மடாண்டே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிளெசிங் முசரபானி, ஐன்ஸ்லி நட்லோவ், ரிச்சர்ட் ங்க்வாரே, சீன் வில்லியம்ஸ். போட்டி அட்டவணை விவரம்: முதல் டி20 போட்டி; மே 3 - சட்டோகிராம், 2வது டி20 போட்டி; மே 5 - சட்டோகிராம், 3வது டி20 போட்டி; மே 7 - சட்டோகிராம், 4வது டி20 போட்டி; மே 10 - டாக்கா, 5வது டி20 போட்டி; மே 12 - டாக்கா

மார்கஸ் ஸ்டோய்னிஸ் சாதனை 

ஐ.பி.எல் தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்தில் 124 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஸ்டோய்னிஸ் 124 ரன்கள் எடுத்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஐ.பி.எல் வரலாற்றில் இலக்கை விரட்டும் போது (ரன் சேச்சிங்கின் போது) தனிநபராக அதிகபட்ச ரன் எடுத்த வீரர் பட்டியலில் பால் வால்தாட்டி-யை (120 ரன் *) பின்னுக்கு தள்ளி ஸ்டோய்னிஸ் (124 ரன் *) முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ரன் சேசிங்கின் போது அதிகபட்ச ரன் அடித்த வீரர்கள் விவரம்: 1. மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் - 124*, சென்னைக்கு எதிராக, சேப்பாக்கம், 2024*, 2. பால் வல்தாட்டி - 120*, சென்னைக்கு எதிராக, மொஹாலி, 2011, 3. வீரேந்திர சேவாக் - 119, டெக்கான் சார்ஜர்ஸ்க்கு எதிராக, ஐதராபாத், 2011., 4. சஞ்சு சாம்சன் - 119, பஞ்சாப் கிங்ஸ்-க்கு எதிராக, மும்பை, 2021., 5. ஷேன் வாட்சன் - 117 *, ஐதராபாத்துக்கு எதிராக, மும்பை, 2018. (இறுதிப்போட்டி).

வெற்றி குறித்து கே.எல்.ராகுல்

சென்னைக்கு எதிரான வெற்றி குறித்து லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த போட்டி மிகவும் ஸ்பெஷலான ஒரு போட்டி. அதிலும் குறிப்பாக இது போன்ற ஒரு வெற்றி மிகச் சிறப்பான உணர்வை தருகிறது. இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் ரன் ஏதும் எடுக்காமலேயே முதல் விக்கெட்டை இழந்ததும் அதிலிருந்து மீண்டு வந்தது மிகச் சிறப்பாக இருந்தது. 170 முதல் 180 ரன்களில் சென்னை அணியை சுருட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் சென்னை அணியின் வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்து 200 ரன்களை கடந்தனர்.

அதேபோன்று எங்களது அணியில் ஸ்டாய்னிஸ் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார். அவர் பவர் ஹிட்டராக மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் அடிக்க வேண்டிய பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அடித்தார். மூன்றாவது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் பயமற்ற ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். அதன் காரணமாகவே பவர்பிளேவில் ஒரு விக்கெட் விழுந்த போதும் அவரை களம் இறக்கினோம். அந்த முடிவு மிகச் சரியான அமைந்துதோடு சேர்த்து எங்களுக்கு வெற்றியையும் தேடித்தந்தது. ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்டில் தற்போது இம்பேக்ட் விதிமுறை இருப்பது மேலும் பேட்டிங்கின் ஆழத்தை அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

சேவாக்கின் இந்திய டி-20 அணி

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார். இதே போல ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார்.

மேலும் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என அஜித் அகர்கரிடம் சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி., ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சந்தீப் சர்மா, முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து