முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 26 - பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூபாய் 2ம், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூபாய் 50ம் நேற்று நள்ளிரவு முதல் எதிர்பாராத வகையில் மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இன்றியமையாத சமையலுக்கு இந்த விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினால் குடும்பத்தை நடத்தும் தாய்மார்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இது போதாது என்று டீசல் விலையும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது வேதனைக்குரியதாகும். எத்தகைய பிரிவு மக்களில் யாரும் வீட்டிலேயே அடைந்து கிடைக்கப் போவதில்லை. வேலைக்கும், வியாபாரத்திற்கும், பள்ளிக் கூடத்திற்கும், மருத்துவமனைகளுக்கும் என அன்றாடம் போக வேண்டிய குடும்பங்களின் போக்குவரத்து செலவுகள் இதனால் அபரிமிதமாக அதிகரிக்கும்.
இந்திய அரசு நடத்தும் எண்ணெய் கம்பெனிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்திய அரசின் சொந்த நிதிநிலையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விலை உயர்வு மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடியது என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளது விந்தையாக உள்ளது. ஆனால் உண்மையில் மத்திய அரசுக்கு வருவாய்க்கான பல துறைகள் உள்ளன. மேலும் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் அதிகாரமும் உள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடன் எழுப்பும் வாய்ப்புகளும் அதிகம். மத்திய அரசின் பற்றாக்குறையை ஈடுகட்ட பல வழிகள் உண்டு.
கூலி வேலைக்குப் போனால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள ஏழை, நடுத்தர மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டால், அவர்கள் அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட எங்கே போவது? ஒரு மக்கள் நல அரசுக்கு இலக்கணம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டுமே தவிர, வறுமையில் வாட்டுவதாக இருக்கக் கூடாது. ஆகவே இந்திய அரசின் இந்த நடவடிக்கை மக்கள் விரோதமானது.
ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கை மேலும் விலைவாசி உயர்வை ஒரு சதவிகித்திற்கும் மேல் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தண்டச் செலவையும், தேவையற்ற திட்டங்களுக்கான செலவையும் இந்திய அரசு தவிர்த்தாலே போதும். இத்தகைய விலை உயர்வுக்கு அவசியம் இராது. அதை விட்டுவிட்டு ஏழை, நடுத்தர மக்களின் மேல் இந்த கூடுதல் செலவை சுமத்துவது கண்டிக்கத்தக்கதாகும். தே.மு.தி.க. சார்பில் இப்பொழுது ஏற்பட்டுள்ள விலை உயர்வை மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் கண் மூடித்தனமாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியதையும் சேர்த்து திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மக்களுக்காகத்தான் அரசே தவிர, அரசுக்காக மக்கள் அல்ல. அரசின் பற்றாக்குறையை ஈடுகட்ட மக்களை வாட்டி எடுப்பது உண்மையான ஜனநாயகம் ஆகாது.
இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்