முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே தாய்-மகள் வெட்டிக்கொலை

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், டிச.1 - திருமங்கலம் அருகே தாயும் மகளும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளரை போலீசார் தேடி வருகிறார்கள். திருமங்கலம் விமான நிலையச் சாலையில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள்(45). இவர் திருமங்கலம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் மோகன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டுச் சென்று கக்கன் காலனியில் தனியாக வசித்துவருகிறார். இந்த நிலையில் பாண்டியம்மாளின் மகள் வாசுதேவி(19)க்கும் விருதுநகரைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் மணவாழ்வில் விரக்தியடைந்த வாசுதேவி திருமணமான பத்தே நாளில் கணவரை விட்டு பிரிந்து தாயுடன் சேர்ந்து வசித்துவந்தார். நேற்று காலை பாண்டியம்மாள் வீட்டு கதவு திறந்துகிடந்ததும் உள்ளே இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்ததையும் கண்ட அப்பகுதி மக்கள் திருமங்கலம் டவுன் போலீஸ் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது பாண்டியம்மாள் முன் அறையிலும், படுக்கை அறையில் வாசுதேவியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். கொலை செய்யப்பட்டு கிடந்த தாய் மற்றும் மகளின் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்ட பாண்டிம்மாளுக்கும் திருமங்கலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் வீரணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு நீண்ட காலமாக குடும்பம் நடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த கொலையில் வீரணனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் இரட்டைக் கொலைக்கான முழு விபரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்