முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது பேச்சில் நான் காங்கிரஸ் கட்சியை குறிப்பிடவில்லை:குமாரசாமி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : பெங்களூரில் ம.ஜ.த. தலைமை அலுவலகத்தில் நடந்த பாராட்டு விழாவின் போது எனது பேச்சில் நான் காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் தலைவர்கள் குறித்து எதுவுமே பேசவில்லை. எங்குமே காங்கிரஸ் குறித்து குறிப்பிடவில்லை. ஆனால் ஊடகங்கள் எனது பேச்சை பெரிதுபடுத்தி விட்டன என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள ம.ஜ.த. தலைமை அலுவலகத்தில் ஜூலை 14-ல் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் குமாரசாமி, உங்களுடைய அண்ணனோ, தம்பியோ முதல்வராகி விட்டார் என நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஆனால் முதல்வரான பிறகு நான் மகிழ்ச்சியாக இல்லை. சிவனை போன்று மனவலியை நஞ்சாக உண்டு, உங்களுக்கு அமுதத்தை கொடுத்து கொண்டிருக்கிறேன். கூட்டணி ஆட்சியின் வலி எனக்குத் தெரியும்.

இந்தப் பதவியை கடவுள் கொடுத்திருக்கிறார். கடவுளின் விருப்பப்படி, எத்தனை நாட்கள் நான் பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறாரோ, அத்தனை நாட்கள் முதல்வராக இருப்பேன். அதுவரை கர்நாடக மக்களுக்கு நல்லது செய்வேன். என் தந்தை தேவகவுடாவின் நிறைவேறாத ஆசை எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன் என்று கூறிக் கொண்டே உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

இதுகுறித்து கர்நாடக பா.ஜ.க.வின் டுவிட்டர் பக்கத்தில்,

மிகச் சிறந்த நடிகர் விருது அவருக்கு (குமாரசாமி) அளிக்கப்பட வேண்டும். நமது நாடு அதிக எண்ணிக்கையிலான திறமையான நடிகர்களை கொண்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளார். நடிப்பு திறமையை வெளிப்படுத்தி குமாரசாமி மக்களை முட்டாள்களாக்குகிறார்  என்று பதிவிட்டிருந்தது.

கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜி.பரமேஸ்வர் கூறுகையில், குமாரசாமி கட்டாயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்றார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியதாவது:-

அது எங்கள் கட்சியின் நிகழ்வு. எனவே அங்கு நான் சிறிது உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். அதில் நான் காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் தலைவர்கள் குறித்து எதுவும் பேசவில்லை. எங்குமே காங்கிரஸ் குறித்து குறிப்பிடவில்லை. ஆனால் ஊடகம் எனது பேச்சை ஊதிப் பெரிதுபடுத்திவிட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து