முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த 2 மின் ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் - நிதியுதவி முதல்வர் எடப்பாடி உத்தரவு

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த இரு மின் ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிதி உதவியும், அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பாராட்டு

கடந்த 16-ம் தேதி அதிகாலை கஜா புயல் நாகப்பட்டினம் மாவட்டம் அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்த போது, டெல்டா மாவட்டங்கள் உள்பட12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. எனினும், புயலின் தாக்கத்தினால், கால்நடைகள், வீடுகள், பயிர்கள், மின்கம்பங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. புயலின் கடுமையான தாக்கத்தினால் 1,13,566 மின் கம்பங்கள், 1,082 மின் மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் சேதமடைந்தன. இரவு பகல் பாராது, தங்கள்உயிரையும் துச்சமென நினைத்து, சேதமடைந்த மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சீர் செய்யும் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் 24,941 மின்வாரிய ஊழியர்களின் பணியினை நான் மனதார பாராட்டுகிறேன். அவர்களது பணி மெச்சத்தக்கது.

2 பேர் உயிரிழப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கோகூர் கிராமத்தைச் சேர்ந்த வயர்மேன் சண்முகம். 16-ம் தேதி மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 20-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், களமாவூர் கிராமத்தில், மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல்மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 23.11.2018 அன்று உயிரிழந்தார் என்றசெய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

தலா ரூ. 15 லட்சம்

கஜா புயலின் தாக்கத்தினால் சேதமடைந்த மின் கம்பங்களை சீர் செய்யும்பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மின்கம்பம் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு சிறப்பினமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 13 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும் என மொத்தம் தலா 15 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், உயிரிழந்த சண்முகம் மற்றும். முருகேசன் ஆகியோரின் குடும்பத்தினர் தலா ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து