முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : வடகிழக்கு பருவ மழை வரும் 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் 8-ம் தேதி தொடங்கியது முதல் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமின்றி மகராஷ்டிரா, குஜராத், ஒடிசா மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும் அதிக அளவு மழை கிடைத்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை கர்நாடகாவில் தீவிரமடைந்ததால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணை நிரம்பி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

தென்மேற்கு பருவ மழை வடஇந்தியாவில் விலகுவதற்கான அறிகுறி தொடங்கி விட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை விலகி விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் விலகி விடும். அதன்பிறகு காற்றின் திசை மாறும். அதன் பிறகு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதை கணித்து விடுவோம். அநேகமாக வருகிற 20-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை நவம்பர் 2-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு முன்கூட்டியே அக்டோபர் 20-ம் தேதி தொடங்கும் அறிகுறி காணப்படுகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து