முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ப்ராவோ' அபார பந்துவீச்சு: பெங்களூரை ஊதித்தள்ளிய சி.எஸ்.கே

சனிக்கிழமை, 25 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் போட்டியின் 35-வது லீக் ஆட்டம், வெள்ளிக்கிழமை சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலியின் பெங்களூரு அணியும், மகேந்திர சிங் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை சூப்பங் கிங்ஸ்.

கோலி - படிக்கல்...

டாஸ் வென்ற சென்னை, பெங்களூரை பேட்டிங் செய்ய அழைத்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

111 ரன்கள் வரை... 

13.2 ஓவர் வரை இருவரும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் 111 ரன்கள் வரை குவித்தனர். இருவருமே அரை சதம் விளாசியதும் பாராட்டுக்குரியது. பெங்களூருக்கு இந்த இரு பேட்ஸ்மென்களும் இரும்பு அரண் போல நின்று ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த போது, சென்னை விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறியது என்றே சொல்லலாம்.

தகர்த்தார் ப்ராவோ...

ஹேசல்வுட், ஜடேஜா, ப்ராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என சென்னையின் அனைத்து பந்து வீச்சாளர்களும் ஒரு சுற்று வந்துவிட்டனர். அப்போதும் பெங்களூரின் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது, ப்ராவோவின் 13.2-வது பந்தில், விராட் கோலி அடித்த பந்து ஜடேஜாவிடம் தஞ்சமடைந்தது. பெங்களூரின் பேட்டிங் அரண் தகர்ந்தது.

அடுத்தடுத்து அவுட்...

வலுவான பேட்டிங் லைன் அப்பைக் கொண்டிருக்கும் பெங்களூரு அணி, அடுத்தடுத்து சிறப்பாக அடித்து ஆடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, ஏ பி டிவில்லியர்ஸ், தேவ் தத் படிக்கல், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல் என எல்லா முன்னணி பேட்ஸ்மென்களும் சீட்டு கட்டு போல சரிந்தது. கோலி, படிக்கல் தவிர எந்த ஒரு பெங்களூரு பேட்ஸ்மென்னும் 15 ரன்களைக் கூட தொடவில்லை.

7 ஓவர்களில்... 

13 ஓவர் முடிவில் 111 ரன்களுக்கு விக்கெட் எதுவும் பறிகொடுக்காமல் ஆடி வந்த பெங்களூரு, அடுத்த 7 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளைப் பரிகொடுத்து 45 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரின் பேட்டிங் அரணைத் தகர்த்த ப்ராவோ, 4 ஓவர்களுக்கு 24 ரன்களை விட்டுக் கொடுத்து, கோலி, மேக்ஸ்வெல் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சென்னை வசம்...

அவரைத் தொடர்ந்து 4 ஓவர்களை வீசிய ஷர்துல் தாகூர் 29 ரன்களைக் கொடுத்து ஏ பி டிவில்லியர்ஸ் மற்றும் தேவ்தத் படிக்கல்லின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 14-வது ஓவர் முதல் ஆட்டம் சென்னையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அதன் பிறகு ஆட்டம் நிறைவடையும் வரை அவர்களே ஆதிக்கம் செலுத்தி வென்றனர்.

157 ரன்கள் இலக்கு...

பெங்களூரின் ஆட்டத்துக்குப் பிறகு, ஷார்ஜா போன்ற மைதானத்தில் சென்னை போன்ற அணிக்கு எதிராக 156 ரன்கள் மட்டுமே குவித்திருப்பது போதாது என கூறப்பட்டது. 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸின் ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாப் டூப்ளசி ஜோடி சிறப்பாகத் தொடங்கினர்.

மொயின் - அம்பதி...

8.2-வது ஓவரில் 38 ரன்களோடு ரிதுராஜும், 9.1-வது ஓவரில் 31 ரன்களோடு ஃபாஃப் டூப்ளசியும் தங்கள் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இருப்பினும் சென்னையின் பேட்டிங் லைன் அப் வலுவானது என்பதால், அடுத்தடுத்து வந்த மொயின் அலி, அம்பதி ராயுடு ஆகியோரும் அடித்து விளையாடினர்.

4-வது முறை...

கடைசியில் சுரேஷ் ரெய்னா, டோனி இணை நிதானமாக ரன்களைக் குவித்து வெற்றி பெற்றனர். இந்த ஜோடி இணைந்து ஐ.பி.எல் போட்டிகளை நிறைவு செய்வது இது நான்காவது முறை.சென்னை 11 பந்துகளுக்கு முன்பே அடித்து போட்டியை வென்றது. ப்ராவோ பந்துவீச்சு பெங்களூருவின் ரன்ரேட்டுக்கு மிகப்பெரிய தடையாக அமைந்தது, சென்னை எளிதில் வெற்றி பெற வழிவகுத்தது.

தொடர்ந்து சறுக்கல்

ஏப்ரல் மாதம் ஐ.பி.எல் 2021 சீசன் தொடங்கிய போது பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தொடர்ந்து நான்கு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளை வெற்றி கொண்டனர்.

2021 ஏப்ரல் 25 அன்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான முதல் போட்டியில், தோல்வி கண்டது பெங்களூரு. அப்போது முதல் அவ்வணியின் சறுக்கல் தொடர்ந்து வருகிறது. அதன் பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் மட்டுமே வென்றது பெங்களூரு.

 

இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7-ல் வென்று 14 புள்ளிகளோடு சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்திலும், பெங்களூரு அணி 9 போட்டியில் 5-ல் வென்று மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து