முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      நீலகிரி
Image Unavailable

மழையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறினார்.

50 சதவீத மானியம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. தோட்டக்கலை இணை இயக்குநர்(பொ) சிவசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாய சங்கங்களிடமிருந்து பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு 70 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது.

நீலகிரி மாவட்டத்தில் மழையினால் சேதமடைந்த சிறு, குறு விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி-இயக்குநருக்கு விண்ணப்பிக்கும் பட்டத்தில் தோட்டக்கலைத்துறை களப்பணியாளர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தெளிப்பு நீர் பாசன கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தால் கள ஆய்வு மேற்கொண்டு தெளிப்பு நீர்பாசன கருவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் குறு பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்திலும் வேளாண் கருவிகள் வழங்கப்படுகிறது. தேவையான விவசாயிகள் ஊட்டி, குன்னூர், கூடலூரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம்.

வன விலங்குகள்

விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்தால் அது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள். பேரூராட்சியின் மூலம் மஞ்சூர் கண்டி கெச்சிகட்டி சாலை மற்றும் டைவி டீ பேக்டரி சாலை சீரமைக்க இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் பணி மேற்கொள்ளப்படும் என பேரூராட்சிகளின் இயக்குநருக்கு கருத்துரு சமர்பிக்கப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் சாலை சீரமைக்கப்படும்.

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் காய்கறி கழிவுகளில் இருந்து உயிர்வாயு தயாரிக்கும் முறை குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர் ஆற்றல்துறையில் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களின் நலன் கருதி டயாலிசிஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், விவசாயிகள், அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து