முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகைக்குள் வழங்கப்படும்: ஓய்வு பெற்ற பஸ் ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஒய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ 750 கோடி நிலுவை தொகை பொங்கல் பண்டிகைக்கு முன்னர் வழங்கப்படும் என்று சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப  வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

அதிகப்படியான நிதி...

மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், முக்கியமானதாக விளங்குவது போக்குவரத்து வாகனங்கள் என்று சொன்னால்  அது மிகையாகாது. இதில், சாலைப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்துத் துறையின் மேம்பாட்டிற்காகவும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நலனை மேம்படுத்திடவும், எண்ணற்ற  திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, போக்குவரத்துக்  கழகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, அதிகப்படியான நிதி வழங்கி வந்துள்ளது.

அரசு மானியமாக...

கடந்த காலங்களில், அதிகரித்து வந்த செலவினத்தை ஈடு செய்வதற்கு ஏற்ப, நிரந்தர நிதி ஆதாரத்தை ஏற்படுத்தாததால், போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கின. இச்சூழ்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையை  சரி செய்யும் பொருட்டு, நிதி ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கான உத்திகளை கடைபிடித்ததோடு, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2011முதல் இந்நாள் வரை, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகை 2,848.36 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியுள்ளது. மேலும், அரசு பொது மக்களின்  நலன் கருதி, போக்குவரத்துக் கட்டணத்தை குறைந்த அளவிலேயே பராமரித்து வருகிறது.

ரூ.750 கோடியை வழங்கும்

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்திட, 5,138.57 கோடி  ரூபாய் அளவிற்கு நிதி வழங்கியுள்ளது. 2017-18-ம் ஆண்டில் மட்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை  வழங்க 1,397.39 கோடி ரூபாயும், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவைத் தொகைக்காக, 291.99 கோடி  ரூபாயும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசு, போக்குவரத்துக் கழகங்களில்  நவம்பர் 30-ம் தேதி வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 750 கோடி ரூபாயினை அரசு வழங்கும்.

பொங்கலுக்கு முன்னர்...

மேலும், இந்த அறிவிப்பின் மூலம் வழங்கப்படும் 750 கோடி ரூபாய் தொகையானது, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு  பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும். இப்போது, அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற  தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களுக்காக மட்டும், இது வரை தமிழ்நாடு அரசு 2,147.39 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆகவே, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில்  ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், பொது மக்களின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும். இவ்வாறு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து