முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

போர்ட்எலிசபெத் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முன்னிலை...

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. 6 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் (டர்பன்), 2-வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் (செஞ்சூரியன்), 3-வது ஆட்டத்தில் 124 ரன் வித்தியாசத்திலும் (கேப்டவுன்) வெற்றி பெற்றது. ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த 4-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

5-வது ஒருநாள்...

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று (13-ந்தேதி) நடக்கிறது. இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வென்று தென்ஆப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் இந்தியாவின் வெற்றி மழையால் பாதிக்கப்பட்டு தோல்வியை தழுவ நேரிட்டது. மேலும் பீல்டிங்கும் சொதப்பலாக இருந்தது.

சமபலத்துடன்...

கடைசி போட்டி வரை சென்று நெருக்கடி ஏற்படுவதை தவிர்த்து 5-வது ஆட்டத்திலேயே வெற்றி பெற இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். இந்த முறை தான் இந்தியாவுக்கு தென்ஆப்பிரிக்க மண்ணில் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 4 ஆட்டத்தில் இரண்டு சதத்துடன் 393 ரன் குவித்துள்ளார். இதேபோல தொடக்க வீரர் தவான் (271 ரன்), ரகானே, டோனி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

குல்தீப் - சாஹல்...

ரோகித் சர்மாவின் ஆட்டம் தான் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அவர் 4 ஆட்டத்தில் 40 ரன்களே எடுத்துள்ளார். கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத கேதர் ஜாதவ் இன்று ஆடுவாரா? என்பது உறுதியில்லை. அவர் உடல் தகுதி பெற்றுவிட்டால் ஷிரேயாஸ் அய்யர் கழற்றிவிடப்படுவார். ஒருநாள் தொடரில் இந்தியாவின் பலமே சுழற்பந்து வீச்சு தான். யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் மிகவும் சிறப்பான முறையில் பந்துவீசி வருகிறார்கள். இருவரும் இணைந்து 4 ஆட்டத்தில் 24 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இருவரும் தலா 12 விக்கெட் எடுத்துள்ளனர்.

முன்னேற்றம் தேவை...

வேகப்பந்தில் புவனேஷ்வர் குமார், பும்ரா உள்ளனர். பந்துவீச்சில் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு கிடையாது. பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை. தொடரை இழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமே. கடந்த போட்டியில் மில்லர், புதுமுக வீரர் கிளாசன் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினர். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

82-வது போட்டி...

இரு அணிகளும் இன்று மோதுவது 82-வது போட்டியாகும். இதுவரை நடந்த 81 போட்டியில் இந்தியா 32-ல், தென்ஆப்பிரிக்கா 46-ல் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டி முடிவு இல்லை. இன்றைய போட்டி பகல்-இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் டெலிவிசன்களில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து