முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளவாளி மீதான நச்சுத் தாக்குதல் விவகாரம்: அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட ரஷிய தூதர்கள் தாயகம் திரும்பினர்

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, உளவாளி மீதான நச்சுத்தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட ரஷிய தூதர்கள் தாயகம் திரும்பினர்.

ரஷிய நாட்டைச் சேர்ந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டின் ராணுவ உளவு அமைப்பில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்ஐ 6-இலும் ரகசியமாக இணைந்த அவர், ரஷிய ராணுவ உளவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி பிரிட்டனுக்கு ரகசியத் தகவல்களை அளித்து வந்தார். இந்த நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த ரஷிய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்க்ரிபாலை கைது செய்தனர்.

ராணுவ ரகசியங்களைக் கசியவிட்டதையடுத்து தேசத் துரோக வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், செர்கெய் ஸ்கிரிபால், மேலும் இரு கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டனர். ஸ்கிரிபாலுக்கு பிரிட்டன் அடைக்கலம் அளித்தது.

இந்தச் சூழலில், மார்ச் 4-ஆம் தேதி செர்கெய் ஸ்க்ரிபாலும், அவரது மகள் யுலியாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வில்ட்ஷைர் மாகாணத்தின் சாலிஸ்பரி நகரப் பூங்காவிலிருந்து மீட்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று குற்றம் சாட்டிய பிரிட்டன், இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தங்கள் நாட்டிலிருந்து 23 ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டது. மேலும், ரஷியாவுடனான தங்களது ஒப்பந்தங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்தது. அதற்குப் பதிலடியாக, 23 பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு ரஷியாவும் உத்தரவிட்டது. மேலும், இருதரப்பு அறிவியல், கலாசார ஒத்துழைப்புக்கான பிரிட்டிஷ் கவுன்சிலையும் மூடியது. அதன் தொடர்ச்சியாக, பிரிட்டனுக்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷிய தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன.

இந்தச் சூழலில், அமெரிக்காவும் தங்களது நாட்டிலிருந்து 60 ரஷிய தூதர்களை வெளியேறுமாறு உடனடியாக உத்தரவிட்டது. சியாட்டில் நகரிலுள்ள ரஷியத் துணை தூதரகத்தை மூடவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், ரஷிய தூதர்கள் அனைவரும் அமெரிக்காவிலிருந்து வெளியேற 7 நாள் கெடுவும் விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தூதர்களை அழைத்து வர ரஷியாவிலிருந்து இரண்டு விமானங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாஷிங்டன் நகரத்தில் உள்ள ரஷிய தூதரகத்திலிருந்து 46 தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட முதல் விமானம் மாஸ்கோவில் உள்ள வினுகோவோ விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. அவர்களை அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அதேபோன்று, நியூயார்க்கில் உள்ள தூதரகம் மற்றும் ஐ.நா. பணிகளில் ஈடுபட்டுள்ள ரஷிய அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு இரண்டாவது விமானம் விரைவில் மாஸ்கோ வந்தடையும் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைக்கு ஜெர்மனி அழைப்பு

தூதர்களை வெளியேற்றும் விவகாரத்தில் இன்னும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ரஷியாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் சந்தேகத்துக்கிடமின்றி நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. தூதர்களை பரஸ்பரம் வெளியேற்றுவது தொடர்பான பிரச்னைக்கு ஜெர்மனி பேச்சுவார்தை மூலமாகவே தீர்வு காண விரும்புகிறது. அதற்கான கதவு எங்களிடம் இன்னும் திறந்தே உள்ளது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து