முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி - மு.க. அழகிரி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க.வின் நிதி மற்றும் சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஒரு வார துக்கம் அனுசரிப்புக்கு முன்பே மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மகன் மு.க.அழகிரி திங்கள்கிழமை போர்க்கொடி உயர்த்தினார்.

தன் குடும்பத்தினருடன் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அழகிரி அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னுடைய ஆதங்கத்தை என் தந்தையிடம் தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். அது என்ன என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள விசுவாசிகள் என்னையே ஆதரிக்கின்றனர்.காலம் இதற்கான பதிலைச் சொல்லும்” எனத் தெரிவித்தார்.

மேலும், அவருடைய ஆதங்கம் கட்சிக்குள்தான் என்றும், குடும்பத்திற்குள் இல்லை என்றும் அழகிரி கூறினார். கட்சிக்குள் மீண்டும் தான் சேர்த்துக்கொள்ளப்படுவேனா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.

தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் கூடுவதற்கு ஒருநாள் முன்பு அவர் இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், ஒருவார துக்க அனுசரிப்பு முடிவடையும் முன்னரே கட்சி குறித்து இவ்வாறு அழகிரிபேசியுள்ளார்.

அதன்பின்பு,  ஒரு ஆங்கில நாளிதழுக்கு அழகிரி பேட்டியளித்தார்.  அதில் அவர் கூறுகையில் “தி.மு.க.வின் சொத்துகள் மற்றும் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. கட்சி நிதியை வட்டிக்கு விடும் அளவுக்கு அவர்கள் வளைந்துள்ளனர். இதனால் வரும் லாபம் கட்சிக்குச் சென்று சேருவதில்லை. அதனால் யார் லாபம் அடைகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் இப்போது கட்சிக்குள் இருந்தால், இதனையெல்லாம் தடுத்திருப்பேன். அதனால் தான் என்னை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கத் தயங்குகின்றனர். கட்சியின் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூறினார்.

மேலும், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தான் ஆசைப்படவில்லை எனவும், தொண்டனாக தன் தந்தையைப் போல் கட்சியை வலுப்படுத்துவதே தனது எண்ணம் எனவும் அழகிரி தெரிவித்தார்.

தி.மு.க.வில் அழகிரி - ஸ்டாலின் இடையே மோதல் வலுத்தது. இதையடுத்து 2014 மார்ச் 25-ம் தேதி கட்சியில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். கருணாநிதி உயிருடன் இருந்தபோதே தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்கு அழகிரி பல பிரயத்தனங்களை எடுத்தாலும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும் தனக்கு கட்சிக்குள் பதவியோ அல்லது உரிய இடமோ வழங்கப்படாது என அறிந்த அழகிரி, தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து