முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை இனி புதிய அமர்வு விசாரிக்கும் - ஐகோர்ட் தலைமை நீதிபதி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : ஸ்டெட்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வை ஐகோர்ட் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். தற்போது, நீதிபதி சத்தியநாராயணன் மதுரைக் கிளையில் உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆஷா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் இருந்த போது, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சசிதரன், தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். மேலும், வேறு அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, உடனடியாக வேறு அமர்வை அமைக்க வேண்டும் என ஆலை தரப்பில் தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் முறையிடப்பட்டது.

இதனையடுத்து ஸ்டெட்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வை ஐகோர்ட் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சசிதரன் விலகியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து