முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

60 அடியை தாண்டியது மேட்டூர் அணை தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டியுள்ளதால் அப்பகுதிகளில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கடந்த இரு நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இதனால், அம்மாநிலங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 84 அடி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணை 82 அடியாக நிரம்பியது. நேற்று முன்தினம் வரை கபிணி அணைக்கு நொடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அது அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்ட நிலையில், பின்னர் ஒன்றே கால் லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் உப அணையான தாரகாவில் இருந்து நொடிக்கு 25,000 கனஅடி வீதம் காவிரியில் பாய்கிறது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து நொடிக்கு 50,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதன்காரணமாக காவிரியில் மொத்தமாக 2 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. திறந்து விடப்பட்ட நீரானது, நொடிக்கு ஒரு லட்சம் கனஅடி என்ற வீதத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வருவதால், அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 54 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 57. 16 அடியாக உயர்ந்து இருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்ததை தொடர்ந்து 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டி உள்ளது.

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல், தண்ணீர் வர உள்ளது . அணை பகுதியில் உள்ள மக்கள், மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். மேட்டூர் அணை கரையோரம் மற்றும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளவர்கள் நீரில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து