முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியர் நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணை இம்மாதம் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, பேராசிரியை நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணைக்காக பேராசிரியை நிர்மலாதேவி ஸ்கூட்டரில் வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆய்வு மாணவர் கருப்பசாமியும் நீதிமன்றத்தில் ஆஜரானார். தனது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருப்பதால் உதவிப் பேராசிரியர் முருகன் மட்டும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகவில்லை. அதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை இம்மாதம் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பரிமளா உத்தரவிட்டார். அன்றைய தினம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுகுறித்து பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அளித்த பேட்டியில், 9-ம் தேதி பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றையதினம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து