முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் நடந்த இரட்டைக் கொலை- குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி: சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

கோவையில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்தள்ளுபடி செய்து அவருக்கு தூக்கு தண்டனையையும் உறுதி செய்தது.

கோவை ரங்கேகவுடர் வீதியை சேர்ந்த தொழிலதிபர் ரஞ்சித்குமார் ஜெயின் - சங்கீதா தம்பதியரின் 2 குழந்தைகளும் பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் கொன்று வீசப்பட்டிருந்தனர். 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி முஸ்கின், 3-ம் வகுப்பு படித்து வந்த அவளது தம்பி ரித்திக் இருவரும் கால்டாக்சியில் பள்ளிக்கு சென்று வந்தனர்.  கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற போதுதான் காரில் கடத்தி கொலை செய்து ஆற்றில் வீசப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

அப்போது கோவை போலீஸ் கமிஷனராக இருந்த சைலேந்திர பாபு தலைமையிலான போலீசார் துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடித்தனர். கால் டாக்சி ஓட்டுனர் மோகன்ராஜ், அவனது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் திட்டம் போட்டு இருவரையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சிறுமி முஸ்கினை, டிரைவர் மோகன்ராஜ், மனோகரன் இருவரும் கற்பழித்து கொலை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்ற போது தப்பியோடிய மோகன்ராஜ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது கூட்டாளி மனோகரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டான். கோவை மகிளா கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

2 ஆண்டுகளுக்கு பிறகு மகிளா கோர்ட் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் 3 ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மனோகரன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையும் 2 ஆண்டுகளாக நடைபெற்றது. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி ஐகோர்ட்டும் மனோகரனின் தண்டனையை உறுதி செய்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து மனோகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு இது தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அப்போதும் மனோகரனின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மனோகரன் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நாரிமன், சூரியகாந்த், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனோகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனோகரனின் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் நாரிமன், சூரியகாந்த் கூறினர். ஆனால்  மற்றொரு நீதிபதியான சஞ்சீவ்கண்ணா மனோகரனுக்கு சிறை தண்டனை மட்டும் போதும் என்ற தனது கருத்தை பதிவு செய்தார். இருப்பினும் 2 நீதிபதிகள் தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் மனோகரனின் சீராய்வு மனு தள்ளுபடியானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து