திருமணமான ஒரு மணி நேரத்திலேயே கார் கேட்ட மனைவி

கோலாலம்பூர், மார்ச்.13 - மலேசியாவில் திருமணமான ஒரு மணி நேரத்திலேயே தனது மனைவியை ஒருவர் விவாகரத்து செய்ய விண்ணப்பித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோலாலம்பூரில் லீ என்பவர் தனது காதலி வாங்கை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார். அப்போது அங்கு ஒரு கார் டீலர் வந்தார். அவரை பார்த்த வாங், தனக்கு புதிய கார் ஒன்றை வாங்கித் தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு லீ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி வாங், தனது கணவருடன் தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் எனக்கு கார் வாங்கித் தரவில்லை என்றால் உன்னை விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இவ்வளவு பிடிவாதம் பிடிக்கும் மனைவி தேவையில்லை என்று நினைத்த லீ, வாங்குடன் விவாகரத்து பிரிவுக்கு சென்று அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார். இதையடுத்து அவர்களுக்கு விரைவில் விவாகரத்து கிடைக்கவிருக்கிறது. திருமணமான ஒரு மணி நேரத்திலேயே விவாகரத்து கேட்ட இந்த சம்பவம் மலேசியா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.