முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸார் சுற்றி வளைப்பு: முஷாரப் கைது செய்யப்படுகிறார்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஏப்ரல்.19 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்,பாகிஸ்தானில்  ஆட்சி மாற்றத்துக்குப் பின் லண்டன் மற்றும் துபாயில் தஞ்சம் புகுந்தார். பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த மாதம் பாகிஸ்தான் திரும்பினார்.

அவர் மீது முன்னாள் பிரதமர் பெனசிர் கொலை வழக்கு, நீதிபதிகளை சிறை வைத்து மிரட்டிய வழக்கு உள்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 4 வழக்குகளிலும் அவர் ஜாமீன் பெற்றிருந்தார். பெனாசிர் கொலை வழக்கில் கராச்சி மற்றும் லாகூர் கோர்ட்டுகளில் ஆஜராகி ஜாமீன் நீடிப்பு கேட்டு மனு தாக்கல் செய்தார். 3 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் நீடிப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகளை சிறை வைத்த வழக்கில் ஜாமீனை நீடிக்குமாறு கேட்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு விசாாரணைக்காக அவர் கோர்ட்டுக்கு வந்திருந்தார். அப்போது ஜாமீன் நீடிப்பு கோரும் அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அத்துடன் முஷாரப்பை கைது செய்யுமாறும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தீர்ப்பை கேட்ட முஷாரப் அதிர்ச்சி அடைந்து அவசரமாக கோர்ட்டைவிட்டு வெளியேறினார். 

பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சூழ்ந்துகொண்டு அழைத்துச் சென்றனர். கைது நடவடிக்கையை தவிர்க்கவே அவர் தப்பி ஓடிவிட்டதாககோர்ட்டு  வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் முஷாரப்பின் செய்தி தொடர்பாளர் இதை மறுத்தார். தீவிரவாதிகளால் முஷாரப் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு பாகிஸ்தான் அரசு முழு பாதுகாப்பு அளித்து வருகிறது. அவர் எங்கும் தப்பி ஓடவில்லை. அவரை பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர் என்றார்.

  முஷாரப் மீதான வழக்குகளில் இந்த கோர்ட்டு தான் ஜாமீன் நீடிப்பு வழங்கியது. தற்போது இதே கோர்ட்டு ஜாமீனை ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து அப்பீல் செய்ய முஷாரப் முடிவு செய்துள்ளார். தற்போது அவர் இஸ்லாமாபாத் பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். முஷாரப் 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.  4 மனுக்களும் தள்ளுபடியானதால் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. வேட்பு மனுக்கள் தள்ளுபடி ஆன நிலையில் தற்போது கைது வாரண்டு பிறப்பித்து இருப்பது முஷாரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்