முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில அபகரிப்பு: நடிகர் - தி.மு.க. எம்.பி. ரித்தீஷ் கைது

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

காஞ்சிபுரம், நவ.17 -   நில அபகரிப்பு வழக்கில் நடிகரும் ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் நேற்று கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் சேந்தமங்கலத்தில் தி.மு.க. எம்.பி. ரித்தீஷ்க்கு சொந்தமாக நிலம் உள்ளது. இதே சேந்தமங்கலத்தில் சாமிக்கண்ணு என்பவருக்கு நிலம் உள்ளது. இவர் ஒரு நில புரோக்கர். இவர், காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

பிரபல நடிகரும், ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ், சேந்தமங்கலத்தில் எனக்கு சொந்தமாக இருந்த 1.45 ஏக்கர் நிலத்தை என் கையெழுத்தைப்போல் போலி கையெழுத்து போட்டு, டெல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு விற்றுள்ளார். நிலத்தை அபகரித்து மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது நிலத்தை மீட்டுத் தரவேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாணையில் ரித்தீஷ் எம்.பி. நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் நேற்று சென்னை மயிலாப்nullரில் உள்ள ரித்தீஷ் வீட்டுக்கு  வந்த போலீசார், நில மோசடி வழக்கில் அவரை கைது செய்து, காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ரித்தீஷ் எம்.பி. ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவு படி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரித்தீஷ் எம்.பி. மீது நில அபகரிப்பு செய்த குற்றத்துக்காக 465, 467, 468,471,420,109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மந்திரி, எம்.பி.யாக இருந்தாலும், தவறு செய்தவர்கள் மீது துணிச்சலாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று பொதுமக்கள் பாராட்டுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்