முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடையாறு ஆற்றில் பாயும் 40,000 கனஅடி வெள்ள நீர் : கரையோர வீடுகள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      தமிழகம்
Adiyru 2023-12-05

Source: provided

சென்னை : சென்னை அடையாறு - ஆற்றில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 40,000 கனஅடி தண்ணீர் பாய்வதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், சைதாப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடையாறு ஆற்றின் கரையோர வீடுகள், கட்டிடங்கள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.

தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கியபோது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய நிலையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதி கனமழையாக கொட்டியது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இதனிடையே செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்தேக்கங்களில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.

அடையாறு ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, காவல் துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. மேலும், அடையாற்றின் கரையோர பகுதிகளான ஈக்காட்டுத்தாங்கல், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், பல்வேறு இடங்களில் இருந்துவரும் நீர்வரத்தால், அடையாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அடையாற்றில் 40,000 கனஅடி தண்ணீர் பாய்ந்து செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

பொதுமக்கள் குற்றச்சாட்டு: அடையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் தரப்பில் போதுமான முன்னறிவிப்பு செய்யப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

திங்கள்கிழமை இரவு 7.30 மணி முதல் அதிகரிக்க தொடங்கிய வெள்ள நீரில் சைதாப்பேட்டை திடீர் நகர் பகுதியை சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதியில் வசித்த 200-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அருகில் இருக்கும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அடையாறு ஆறு பாயந்து ஓடுவதை வெவ்வேறு பகுதிகளில் உள்ள பாலங்களின் மேல் ஆபத்தை உணராமல் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில், அடையாற்றில் ஓடும் வெள்ளத்தைப் பார்க்க ஆர்வமாக திரண்டுள்ள மக்கள், பலரும் வெள்ளத்தை தங்களது செல்போனில் படம்பிடித்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்தப் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து