முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பெயரில் உள்ள அறக்கட்டளையில் பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது :அமைச்சர் சின்னையா

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.14-​கால்நடை அமைச்சராக பதவி ஏற்றவுடன் எனக்கு முதல்வரின் பெயரில் உள்ள அறக்கட்டளையில் பேச வாய்ப்பு கிடைத்தற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கால்நடைதுறை அமைச்சர் சின்னையா பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழக விவசாயிகளின் வாழ்வோடும் வளத்தோடும் பின்னிப் பிணைந்திருப்பது கால்நடை வளர்ப்பாகும். பலவித இடையூறுகளால் விவசாயம் சரிவர நடக்காத காலங்களில் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுப்பதும், விளைச்சல் நல்லபடியாக இருக்கும்போது கூடுதல் வருமானம் ஈட்டு தருவதும் கால்நடைகளே. கால்நடை உற்பத்தித் தொழில் சிறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகளின் கையில் உள்ளது. அதிலும் குறிப்பாக கால்நடை வளர்ப்பில் பெண்களே தொடர்ந்து சிறப்பான பங்கு வகிக்கிறார்கள். எனவே, தமிழக கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்தில் கால்நடை வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. இனி வரும் காலங்களில் விவசாயத் துறையில் எட்ட வேண்டிய வளர்ச்சியில் தற்போது 37 விழுக்காடுகள் அளவில் உள்ள கால்நடை மற்றும் மீன் வளர்ப்பின் பங்களிப்பு 50 விழுக்காடுகளுக்கு மேல் அதிகரிக்குமென கருதப்படுகிறது. ஆகவே, கால்நடை வளர்ப்பில் தேவையான முன்னேற்றத்தை அடைய புதிய தொழில்நுட்பங்கள், புதிய கால்நடை மற்றும் கோழியின ரகங்கள், சிறந்த மேலாண்மை முறைகள், தீவன முறைகள், நோய் தடுப்பு முறைகள் போன்றவை அவ்வப்போது கால்நடை வளர்ப்போரை சென்றடைய வேண்டும். ஆகவே முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு கால்நடை வளர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியில் இரண்டாவது வெண்மை புரட்சியை உருவாக்க வறுமையில் வாடும் 60,000 குடும்பங்களுக்கு கறவை மாடுகளும் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 7 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு, குறிப்பாக விவசாய கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகளும் வழங்க ஆணையிட்டு அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் அன்று இத்திட்டம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திருவள்ளூரில் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பால் மற்றும் கோழியின துறைகளில் மிக வேகமான வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தேவைப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா 2011-2012 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஆகிய இரு இடங்களில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என்று அறிவித்து அதற்கான அரசாணைகளும் ஏற்படுத்தி நிதி ஒதுக்கியுள்ளார். மேலும், முதல்வர் ஜெயலலிதா, கோழியின உற்பத்தி மேலாண்மையில் உயர்தர ஆராய்ச்சி மேற்கொள்ளும் பொருட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நவீன கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையம் ஒன்றையும் அறிவித்துள்ளார். 

பசுந்தீவனங்களின் பற்றாக்குறை, கறவை மாடுகளில் பால் உற்பத்தி திறன் குறைவதற்கும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் பசுந்தீவன பற்றாக்குறை 20 விழுக்காடாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே அரசு பசுந்தீவன உற்பத்தியை மேம்படுத்த 24,000 ஏக்கரில் பசுந்தீவன வளர்ப்பிற்கு சிறப்புத் திட்டம் ஒன்றை தொடங்கவும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கியுள்ளது. 

மேலும் மனித மருத்துவத்திற்கு இணையான சிகிச்சைகள் கால்நடைகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். இதற்காக கால்நடை மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். 

இத்தகைய அனைத்து வசதிகளையும் கால்நடைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த முதல்வர் ஜெயலலிதா, அவர் பெயரில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி சொற்பொழிவுகளை நடத்தி வருவது மிகவும் பொருத்தமான ஒன்று. மேலும் இந்த வருடம் இந்த சொற்பொழிவை நிகழ்த்த வந்திருப்பவர் மத்திய அரசின் திட்டக்குழுவின் வேளாண்மை ஆலோசகர் முனைவர் வி.வி.சதாமத்தே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய தேவையான `கால்நடை உற்பததியை பெருக்குவதற்கான விரிவாக்க வழிமுறைகள்' என்ற தலைப்பில் இந்த சொற்பொழிவு அமைந்திருப்பது இன்னும் சிறப்பானதாகும். நமது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமது விரிவாக்கப் பணிகளை, மாவட்ட அளவில் 15 பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், 3 உழவர் பயிற்சி நிலையங்கள், 3 வேளாண் அறிவியல் நிலையங்கள், ஒரு மண்டல ஆராய்ச்சி நிலையம், ஒரு சிறிய அசைபோடும் பிராணிகள் ஆராய்ச்சி மையம், ஒரு கோழியின ஆராய்ச்சி நிலையம் மற்றும் 4 ஆராய்ச்சி பண்ணைகள் அமைத்து, கால்நடை, கோழி மற்றும் மீன்தொழில் பண்ணையாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை இலவச பயிற்சிகள், ஆலோசனைகள், வானொலி பள்ளிகள், தொலைநிலைக் கல்வி, செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் வாயிலாக தொடர்ந்து வழங்கி வருகிறது. 

மேலும் இப்பல்கலைக்கழகம் கால்நடை பராமரிப்பு துறை, ஆவின், மீன்வளத்துறை மற்றும் அனைத்து கால்நடை சார்ந்த துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது மிகுந்த பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்த சொற்பொழிவு பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்பு, ஆவின் போன்ற துறைகள் இன்னும் சிறப்பாக செயல்பட உதவும் என்று கூறி இந்த அருமையான அறக்கட்டளையை ஏற்படுத்திய `பெரியக்காள்- பரமசிவம்'  குடும்பத்தினரை வாழ்த்தி, இதனை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தினையும் பாராட்டுகிறேன். அமைச்சராக பதவியேற்ற பின் எனது முதல் பல்கலைக்கழக நிகழ்ச்சியே முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகிறேன்.     

இவ்வாறு டி.கே.எம்.சின்னைய்யா பேசினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்