முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்

திங்கட்கிழமை, 21 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்த, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பாக நடைபெற்று வரும் அ.தி.மு.க அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 24- ம் தேதி முதல் 27.ம் தேதி வரை காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த வெற்றி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நடத்திய சட்டப் போராட்டங்களும், தர்மயுத்தங்களும் தமிழக மக்களை அரணாகக் காத்து நிற்கின்றன. அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற பொறுப்பிலும், தமிழக முதல்வர் என்ற பதவியிலும் இருந்து, ஜெயலலிதா நடத்திய சட்டப் போராட்டங்களின் வழியில், அ.தி.மு.க அரசும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி, உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பைப் பெற்றுள்ளது அ.தி.முக அரசுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். உடனடியாக காவிரி நீர்ப் பங்கீட்டை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி முறையாக பருவந்தோறும் விவசாயப் பெருமக்களுக்குப் பயன்படும் வகையில் பங்கிட்டு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுக்கூட்டங்கள்

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமைக்கு பெருமை சேர்க்கும் சரித்திர நிகழ்வாகும். ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலன் காக்க நடைபெற்று வரும் தமிழக அரசு, இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றியை அவரது பொற்பாதங்களில் வைத்து போற்றி மகிழ்கிறது. காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தருவதில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து, காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பைப் பெற்றுத் தந்த அ.தி.மு.க.வுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

நாகையில் முதல்வர்

வரும் 27-ம் தேதி திருவாரூரில் நடைபெறும் கூட்டத்திற்கு துணை முதல்வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் .திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வரும் 26-ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்,

அமைச்சர்கள் பங்கேற்பு

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் 24-ம் தேதி கரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் . பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ராமச்சந்திரன், பெரம்பலூர் ஆகியோர் வரும் 24-ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்.  ஆகியோர் வரும் 25-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர், அமைச்சர்கள் தங்கமணி, சி.விஜயபாஸ்கர் மற்றும் வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்துஆகியோர் வரும் 25-ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் வெல்லமண்டி. நடராஜன், வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் . ப. குமார், எம்.பி. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், எம்.பி. ஆகியோர் திருச்சியில் வரும் 26 -ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத். எம்.பி. அருண்மொழிதேவன் ஆகியோர் வரும் 27- ம் தேதி கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்

இந்த கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகளும், எம்.பிக்கள் எம்.எல்.ஏ.க்கள் , முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் அனைத்து நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், விவசாயப் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்திடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து