முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.வி.எம்.-ல் பதிவான வாக்குகளோடு ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி:தேர்தலின் போது இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளோடு விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து தீர்பளித்த சுப்ரீம் கோர்ட், பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளது. 

2013-ல் அறிமுகம்...

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்கள் கடந்த 2013-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபாட் இயந்திர ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டன. 2019-ல் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி தற்போது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன.

மனுக்கள் தாக்கல்...

இந்தச் சூழலில் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது. கடந்த 18-ம் தேதி வாதங்கள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (ஏப்.26) அளிக்கப்பட்டது.

கோரிக்கை நிராகரிப்பு...

தீர்ப்பின் போது, மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றிலும் நிறைய சந்தேகங்களை எழுப்பி நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள தொழில்நுட்ப ரீதியான, அறிவியல் ரீதியான ஆதாரங்களையும், வாதங்களையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

மேலும் அதிகரிக்க.... 

எனவே, மனுதாரர்கள் தரப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் குறித்து வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன. ஆனாலும், இந்த இயந்திரங்களின் நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் தேவையான முடிவுகளை எடுக்கலாம். பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது. தற்போதைய நடைமுறையே சரியாக தான் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். 

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

1) இ.வி.எம்., விவிபாட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணை மற்றும் ஆலோசனை நடத்தினோம்.

2 இ.வி.எம். மற்றும் விவிபாட் இயந்திரங்களின் நம்பகத் தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம்.

3) தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

4) தேர்தல் முடிவுகளை அறிவித்த பின் 45 நாட்களுக்கு இயந்திரங்களை சீல் செய்து வைத்திருக்க வேண்டும்.

5) முடிவுகளை அறிவித்த பின் வாக்குபதிவில் குளறுபடி என்றுக் கூறி வேட்பாளர்கள் யாராவது இயந்திரத்தை சரி பார்க்க விரும்பினால் அவர்களிடம் தேர்தல் ஆணையம் கட்டணம் வாங்கிக்கொண்டு சோதனை செய்ய வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரம் தவறாக செயல்பட்டது கண்டறியப்பட்டால் கட்டணத்தை திருப்பி தர வேண்டும்.

6) தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் இ.வி.எம்.ல் உள்ள மைக்ரோ கண்ட்ரோலாரை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.

7) ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 சதவீத ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் முறையை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

8) இ.வி.எம்.ல் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சின்னத்துடன் பார் கோடு இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து