முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கட்சிப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள்.

அ தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், செங்கல்பட்டு நகர 29-வது வார்டைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு ஏ.ஞானப்பிரகாஷ், கழகத்தின் 47-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழக கொடிக் கம்பத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரம் அடைந்தோம். அன்புச் சகோதரர் ஞானப்பிரகாஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

மேலும், அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து