முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: தமிழகத்தில் எந்த 2 மணி நேரத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிக்கிறார்

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி : தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அதிகாலை மற்றும் இரவில் தலா ஒரு மணி நேரம் மட்டும், அதாவது காலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடித்துக் கொள்ள சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவிட்டுள்ளது. அதன்படி எந்த 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிப்பது என்பது குறித்த நேரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிக்கிறார்.

தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 23-ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பை எதிர்த்து சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது.

தமிழக அரசு மனு...

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை மக்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு இரவு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதால் தமிழக மக்கள் தங்களுக்கு இருக்கும் பட்டாசு வெடிக்கும் உரிமையை இழந்துள்ளனர்.

மேலும் இரவில் 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கும் நிலை ஏற்பட்டால் ஒரே நேரத்தில் அதிகளவில் புகை மாசு ஏற்பட வழி ஏற்பட்டு விடும். எனவே இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அதிகாலையில் 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க மக்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு கூறி இருந்தது.

2 மணி நேரத்திற்கு...

தமிழக அரசின் மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் சுப்ரீம்கோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக்பூசன் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதிகள் தீர்ப்பு அளிக்கும்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். நீதிபதிகளின் தீர்ப்பு விவரம் வருமாறு:-தீபாவளி பண்டிகை தென் மாநிலங்களில் ஒரு நேரத்திலும், வட மாநிலங்களில் மற்றொரு நேரத்திலும் கொண்டாடப்படுவதால் தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மேலும் 2 மணி நேரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது.

தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும். நேரத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியாது என்பதில் கோர்ட்டு தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அந்த 2 மணி நேரத்தை தங்கள் மாநிலத்திற்கு ஏற்ப அம்மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

முதல்வர் பேட்டி...

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று முன்தினம் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ அனைவரது கருத்துக்களையும் கேட்டு அறிந்தபிறகு பட்டாசு வெடிப்பதற்கான நேரம் முடிவு செய்யப்படும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து சட்ட நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது.

புதிய உத்தரவு...

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று பட்டாசு வெடிப்பதற்கான புதிய அறிவுரை ஒன்றை உத்தரவாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று காலையில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் பட்டாசுகள் வெடிக்கலாம். இதற்கான நேரம் வரையறுத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி தினத்தன்று அதிகாலையில் 4 மணி முதல் 5 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம். இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம். ஆனால் காலை 1 மணி நேரம், இரவு 1 மணி நேரம் என்பது நாங்கள் சொல்லும் அறிவுரைதான். எனவே தமிழ்நாட்டில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை அம்மாநில அரசு ஆலோசித்து இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

கண்காணிப்பு பணியில்...

நேரத்தை எப்படி மாற்றிக்கொண்டாலும் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது. இந்த நேர ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டு உறுதியாக உள்ளது. தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக கலெக்டர்கள் முதல் வி.ஏ.ஓ.க்கள் வரை அனைத்து அதிகாரிகளும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். விதிகளை யாரும் மீறக் கூடாது. அப்படி மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர் பேட்டி...

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி தமிழகத்தில் எந்த 2 மணிநேரத்தில் பட்டாசு வெடிப்பது என்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணனன் தெரிவித்தார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் 2 மணிநேரத்தை நிர்ணயம் செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். அதை மீறி நடக்கக்கூடாது. புகை அதிகமாக உள்ள பட்டாசுகளை வெடிக்க கூடாது. என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவு பட்டாசு வெடிக்கும் 2 மணிநேரம் எது என்பதை முதல்வர் நாளை (இன்று) அறிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து