முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மும்மூரம்

வியாழக்கிழமை, 16 மே 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி இந்த தொகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தலைவர்கள் மற்றும் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதுவரை அனல் பறக்கும் வகையில் நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் மும்மூரிமாக ஈடுபட்டுள்ளனர். 

முதல்வர் பிரச்சாரம்

திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும்தான் உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ். முனியாண்டியும், சூலூரில் கந்தசாமியும், ஓட்டப்பிடாரத்தில் பெ. மோகனும், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுகிறார்கள். இவர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி முதல் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிறகு 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். ஒரு சில இடங்களில் நடந்தே சென்று நெசவாளர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். பிறகு  ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர்  தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

துணை-முதல்வர் பிரச்சாரம்

இதே போல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்களும் அந்தந்த தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்தனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர்கள் சரத்குமார், கார்த்திக், நடிகை விந்தியா ஆகியோரும், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவும் பிரச்சாரம் செய்தனர்.

அமைச்சர்கள்...

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், திப்பம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். இத்தொகுதியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன் ஆகியோர் நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.  திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா,  எஸ்.டி.கே. ஜக்கையன், கே. பழனி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

மின்னல் வேக பிரச்சாரம்

ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பெ. மோகன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. வின் மூத்த தலைவர்கள் வாக்கு சேகரித்தனர். இப்படியாக இந்த 4 தொகுதிகளிலும் தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேக பிரச்சாரம் செய்து வந்தனர். இதே போல தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் 4 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். பல இடங்களில் அவர் திண்ணை பிரச்சாரமும் மேற்கொண்டார். 

இன்று மாலை ஓய்கிறது...

தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள்தான் பாக்கி உள்ளது. இதுவரை அனல் பறக்கும் வகையில் நடந்து வந்த பிரச்சாரம் இன்று மாலை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 19-ம் தேதி இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் வெளியூர் ஆட்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். 19-ம் தேதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த முறை ஒப்புகை சீட்டும் எண்ணப்படுவதால் அதற்கான பயிற்சியையும் தேர்தல் அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து