முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை முடிவுகள் தெரிய காலதாமதமாகும்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      இந்தியா
Image Unavailable

சென்னை, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்குப் பிறகே தெரிய வரும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 19-ம் தேதியன்று 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடந்தது. வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்களும், அதனுடன் இணைக்கப்பட்டு இருந்து ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒரு மையத்துக்கு 41 மேஜை என்ற கணக்கில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும். செனனை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை லயோலா கல்லூரி (மத்திய சென்னை), ராணி மேரி கல்லூரி (வட சென்னை), அண்ணா பல்கலைக் கழகம் (தென் சென்னை) ஆகிய 3 மையங்களில் நடைபெறும். தமிழகம் முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சென்னை மையங்களில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்களும் ஈடுபடுவார்கள்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சரி பார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஒரு சட்டமன்றத்துக்கு 5 ஒப்புகை சீட்டு இயந்திரம் என்ற வகையில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும் உள்ளடக்கிய தொகுதிகளை ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும். ஒவ்வொரு ஒப்புகை சீட்டு இயந்திரத்திற்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்த தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள். இதனால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணி விட்டு கடைசியில்தான் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.

தபால் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் கூடுதல் மேஜை போடப்பட்டு அவை எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கையில் துரிதம் காட்டுவதை விட துல்லியமாகவும், சரியாகவும் எண்ணிக்கை அமைய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. எனவே கடந்த ஆண்டுகளில் நடந்தது போல இந்த முறை விரைவாக முடிவுகளை எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது. ஓட்டு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், துணை பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பார்கள். வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் இயந்திரங்களின் எண், ஒப்புகை சீட்டு இயந்திரங்களின் ஆகியவற்றை காட்டிய பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

வாக்கு எண்ணிக்கையை ஒப்புகை சீட்டுடன் சரி பார்க்க வேண்டியதிருப்பதால் ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் சற்று காலதாமதமாகவே அறிவிப்பு வெளியாகும். எனவே தேர்தலின் உத்தேச முடிவை மதியத்துக்கு பிறகு தான் அறிய முடியும். இறுதி முடிவை பெறுவதற்கு இரவு ஆகலாம் என தெரிகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் முடிந்து விடும். சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் தொகுதிக்கு 5 வி.வி.பாட். இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு அதில் உள்ள ஒப்புகை சீட்டுகளும் எண்ணி சரி பார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆகும். ஒரு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை எண்ண குறைந்தது 40 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகலாம். எனவே சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு பிறகே தெரிய வரும். பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவும் இதே போல் காலதாமதமாகும். உ.பி. ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தொகுதிக்கு ஒரு விவிபாட் இயந்திரம் மட்டும் பொருத்தப்பட்டிருந்தது. அதை எண்ணி முடிக்கவே நள்ளிரவாகி விட்டது. அதே போன்ற நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும். எனவே பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும். வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் போது தடங்கல் ஏற்பட்டால் முதலில் அதில் உள்ள பேட்டரி மாற்றப்படும். அதன் பின்னும் பிரச்சினை இருந்தால் விவிபாட் ஒப்புகை சீட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து