முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

65 பொருட்களுக்கு வரி விலக்கு - வரி குறைப்புக்கு ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வெட்கிரைண்டர், மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட 65 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிகுறைப்பு மற்றும் வரி விலக்கு வழங்க வேண்டும் என்று கோவாவில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

கோவாவில் நடைபெற்ற 37-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக்கூட்டத்தில் வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கைகள் கனிவாக பரிசீலிக்கப்பட்டது. விரிவான விவாதத்திற்கு பிறகு கல்லினால் செய்யப்பட்ட அரைப்பான் கொண்ட வெட்கிரைண்டர்கள் மீதான வரியினை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பதற்கு மன்றம் பரிந்துரைத்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு மற்றும் வெட்கிரைண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இன்ஜினியரிங் தொழில் மீதான சில்லறை வேலை தொடர்பான சேவைகளுக்கான வரியானது 18சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக  குறைக்கப்பட்டுள்ளது. இது நமது மாநிலத்தில் உள்ள இந்த தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கக்கூடும்.

மேலும், தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் கொப்பரை, கரும்பு, வெல்லம் போன்றவையினை சேமித்து வைப்பது தொடர்பான சேவைகளுக்கு வரியிலிருந்து முற்றிலுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது. ஜிப்புகளின் பாகங்கள் மீதான வரியானது 18 சதவீத்திலிருந்து – 12 சதவீதமாக குறைத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கையான காய்ந்த புளி மற்றும் மரத்தட்டுகள் மற்றும் மரத் தொன்னைகளுக்கு வரியிலிருந்து முழு விலக்களிக்கப்பட்டுள்ளது தமிழக மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். சிப்பமிட பயன்படுத்துவதற்கான பாலி எத்திலின், பாலிபுரோப்பலின் கொண்டு செய்யப்படும் நெய்த அல்லது நெய்யப்படாத பைகள் மற்றும் சாக்கு பைகள் மீது ஒரே சீரான 12 சதவீத வரி விதித்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம் கருதி 01.07.2017 முதல் 30.09.2019 வரையிலான காலத்திற்கு மீன் துகள்களுக்கு முழு வரி விலக்கு வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வறுகடலை மீதான வரி விகிதம் குறித்து தெளிவுரை வழங்கிடவும் மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டல்களில் தங்குவதற்கான அறை வாடகை ரூ.1000 மற்றும் அதற்கு கீழாக உள்ள பட்சத்தில், முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1001 முதல் ரூ.7500 வரை அறை வாடகை உள்ள பட்சத்தில் 12 சதவீத வரி விதித்திடவும், ரூ.7501 மற்றும் அதற்கு மேலாக உள்ள பட்சத்தில் 18 சதவீதமாக வரி விதித்திடவும் மன்றக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு இந்த வரி விலக்கு மற்றும் வரி குறைப்பானது தமிழகத்தில் சுற்றுலாவை பெரிதும் ஊக்குவிக்கும் விதமாக அமையும்.

வெளிப்புற உணவு வழங்கல் தொடர்பான சேவைகள் மீதான வரி 18 சதவீதத்திலிருந்து உள்ளீட்டு வரி வரவின்றி 5சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய ஆண்டுகளுக்கு இணக்க முறையில் வரி செலுத்துவோர்களால் ஆண்டு கணக்கு விவர அறிக்கை தாக்கல் செய்வதிலிருந்து விலக்களிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.2 கோடி வரை விற்பனை அளவு கொண்ட மற்ற வணிகர்களுக்கும் ஜிஎஸ்டி கட்டாயமாக தாக்கல் செய்வதற்கு பதிலாக அவர்களின் விருப்ப தேர்வின் அடிப்படையில் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிமையாக்கப்பட்ட புதிய முறையில் மாதாந்திர கணக்கு விவர அறிக்கையினை தாக்கல் செய்வதற்கான வசதி வணிகர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், 2020 முதல் அமல்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்திட தமிழ்நாடு அரசால், ஜி.எஸ்.டி. மன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள 65 பொருட்கள் மற்றும் 5 சேவைகள் மீது வரி குறைப்பு செய்திடவும், வரி விலக்கு பெறவும், இனிவரும் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தப்படும். 37-வது சரக்குகள் மற்றும் சேவை வரி மன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கைகள் கனிவாக பரிசீலிக்கப்பட்டதற்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத் தலைவரான மத்திய நிதி அமைச்சருக்கு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து