முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமல்லபுரத்தில் மோடி - ஜிஜின்பிங் சந்தித்து பேசுவது வரலாற்று சிறப்பு - வைகோ அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசுவது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசுவது வரலாற்றுச் சிறப்பு ஆகும். இதன் மூலம் இரு நாட்டிற்கும் சகோதரத்துவம் மலர்ந்து, ஆசியக்கண்டத்தின் அமைதிக்கு வித்திடுவார்கள் என நம்புகிறேன்.

பல்லவர்களின் மூன்று விதமான கட்டிட சிற்பக்கலைக்கு சான்றாக உள்ள, வெட்டுதளி அர்ச்சுணன் தவக்கோலம், கட்டுதளி கடற்கரை அலை வாயில் கோயில், குடைதளி குடை வரைக் கோயில்கள், ஐந்து வகை நிலத்தின் சான்றாக கட்டிடக் கலையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஐந்து ரதம் மற்றும் பல்லவர்கள், எகிப்து, சீனம், ரோம் நாட்டு தொடர்புகளைக் காட்டும் சிற்பங்களை, புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது, புதிய தபால் தலைகள் வெளியிடுவது, இந்திய அரசுக்குச் சொந்தமான வானூர்திகளில் விளம்பரப்படுத்துவது, இந்திய அரசின் சார்பில் வீரத்திற்கு சான்றாக வழங்கப்படும் விருதுகளில் மாமல்லன் விருதுகளை அறிமுகப்படுத்துவது, உலக அளவில் மாமல்லபுரத்தை விளம்பரப்படுத்த உதவும்.

தஞ்சை மற்றும் மதுரையில் சோழன், பாண்டிய மன்னர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவு தோரண வாயில்கள் போன்று, மகேந்திரவர்ம பல்லவன், நரசிம்மவர்ம பல்லவன், ராஜசிம்மவர்ம பல்லவன், தளபதி பரஞ்ஜோதி பெயர்களில் காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் நுழைவு வாயில்கள் அமைக்க வேண்டும். விடுமுறை பண்டிகைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்; தேவைப்படும் இடங்களில் இருவழிச் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். சுற்றுலா படகுப் பயணங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

108 வைணவத் திருத்தலங்களுள் 63-வது திருத்தலமான அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோவில் முகப்பில், பாதியில் நிறுத்தப்பட்ட ராஜா கோபுரம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும். புகழ் வாய்ந்த மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா நகரமாக திகழ, சுற்றுலா பயணிகளின் தேவைகளை அறிந்து, உள்ளூர் மக்களின் கருத்துக்கேட்டு, அயல்நாட்டுப் பயணிகளை மென்மேலும் ஈர்க்கின்ற வகையில், சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து