முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற உழைப்போம். அ.தி.மு.க.வை எந்நாளும் நம் கண்களெனக் காப்போம் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.

அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு விழாவையொட்டி முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் தொண்டர்களுக்கு எழுதிய மடல் வருமாறு:-

தமிழக மக்கள் மீது கொண்ட எல்லையில்லாத அன்பின் அடையாளமாக எம்.ஜி.ஆர். உருவாக்கிய நம் இயக்கம் 46 ஆண்டுகளைக் கடந்து 47-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் நம் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியும், பெருமிதமும் பீரிட்டு எழுகிறது. 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இயக்கம் தோன்றிய நாளையும், அதற்கு முன்னும், பின்னும் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் நாம் அனைவரும் பசுமையாக நினைவில் வைத்திருக்கிறோம். எம்.ஜி.ஆர். தன்னுடைய பொன்னான நேரத்தையும், கடின உழைப்பையும், சிரமப்பட்டு சேர்த்த பெரும் செல்வத்தையும் வாரி வழங்கி, அ.தி.மு.க.வை வளர்த்தார். தந்தை பெரியாரும், அண்ணாவும் வகுத்தளித்த திராவிடர் இயக்க சிந்தனைகளையும், சமுதாய மறுமலர்ச்சிக் கொள்கைகளையும் நிலை நிறுத்தி, மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி தரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு உழைத்த எம்.ஜி.ஆரின் உழைப்பைப் பயன்படுத்தி விட்டு, அவரை உதாசீனப்படுத்திய தி.மு.க. தலைமையை தட்டிக் கேட்டு, அண்ணாவின் பேரியக்கத்தை அவர் ஒருவரால்தான் காப்பாற்றி வளர்க்க முடியும் என்று தமிழக மக்கள் முடிவு செய்ததால், மக்களின் மனநிலையை உணர்ந்து அ.தி.மு.க.வை தொடங்கினார் எம்.ஜி.ஆர்.

சுயநலமிக்க துரோகிகளால், எம்.ஜி.ஆர். மீது மக்கள் கொண்ட பேரன்பை தாங்க முடியவில்லை. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு அந்தத் தீய சக்திகள் எம்.ஜி.ஆருக்கும், அவர் பின் அணிவகுத்த நம்மைப் போன்ற தொண்டர்களுக்கும் இழைத்த கொடுமைகள் ஏராளம், ஏராளம். அவற்றையெல்லாம் கடந்து நம் இயக்கம் இன்று மகத்தான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், ஆட்சி அதிகாரம் வழியாக தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்விற்கும் நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உழைத்த உழைப்பை நாம் நேரில் கண்டோம். தன்னையே அர்ப்பணித்து, இருள் அகற்ற உருகும் மெழுகாய் வாழ்ந்து, தியாகத்தில் தோய்ந்து ஜெயலலிதா அ.தி.மு.க.வை காப்பாற்றினார். மக்களுக்குத் தொண்டாற்ற ஓர் அருமையான நல்லரசையும் நிறுவிச் சென்றிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் அரசியல் பாதையை அறியாதவர்களும், ஜெயலலிதாவின் தியாகத்தின் உயர்வை மதிக்காதவர்களும், திடீர் தலைவர்களாக முளைத்து அதிகார போதையில் திளைக்க மனக்கோட்டை கட்டுபவர்களும், அ.தி.மு.க.வை அசைத்துப் பார்க்க நினைத்து, இன்று மக்களால் அடையாளம் காணப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வையும், அதன் தொண்டர் பலத்தையும் எளிதாக எடை போட்டு விட்டு அரசியல் பயணத்தைத் தொடங்கியவர்கள் இன்று, அ.தி.மு.க.வுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கின் மகத்துவத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கிடக்கின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்தவாறு, அ.தி.மு.க. ஓர் ஆலமரம். ஆயிரம் காலத்துப் பயிர். இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்களுக்காகப் பாடுபடப்போகும் நல்லியக்கம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த நம் பேரியக்கத்தை, தொடர்ந்து வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்ல நாம் அனைவரும் உறுதி ஏற்கும் தருணம் தான் அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம். எம்.ஜி.ஆர். வகுத்தளித்த, பேரறிஞர் அண்ணாவின் அரசியல் பாதையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து காட்டியவாறு, நம் பொது வாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்திட இந்நாளில் சபதம் ஏற்போம். தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் நம் இயக்கத்தை மேலும் வலுப்படுத்திட அயராது உழைப்போம். மக்கள் ஆதரவைப் பெற்று எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற உழைப்போம். அ.தி.மு.க.வை எந்நாளும் நம் கண்களெனக் காப்போம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து