முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா என்கவுண்டர் விவகாரம்: கனிமொழி கருத்துக்கு ஜெயகுமார் கண்டனம்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக கனிமொழி தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள புதிய தனியார் மருத்துவமனையினை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

தேசிய அளவில் ஒப்பிடும் போது வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருகை தருபவர்களுக்கு தரமான சிகிச்சையை தமிழக அரசும், சுகாதாரத்துறையும் அளித்து வருகிறது. வருகின்ற 18-ம் தேதி அன்று டில்லியில் ஜி.எஸ்.டி. கூட்டமானது நடைபெற உள்ளது. அரசின் கருத்துகளை அப்போது நிச்சயமாக தெரிவிப்போம். மாநிலத்தின் நலன் என்ற அடிப்படையில்தான் பல்வேறு வரி விலக்குகளும் வரி குறிப்புகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வருகிறோம். தமிழகத்தில் ஜி.எஸ்.டி. பெரும் சவாலாக இருந்த நிலையில் வர்த்தகர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறு குறு தொழில் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் ஜி.எஸ்.டி.யில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 18-ம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்தின் அடிப்படையில் அதன் பொருள் வந்த பிறகு அரசின் கருத்துகள் தெரிவிக்கப்படும்.

தெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுண்டர் செயலானது மனித உரிமை மீறல் என தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது.  கொடுஞ்செயல் குற்றவாளிகள் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களை எல்லாம் என்கவுண்டர் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. இதைப் போன்ற செயல்கள் மூலமாகவே குற்றங்கள் தடுக்கப்படும். எனவே அவரின் கருத்தானது பொது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கருத்து. தெலுங்கானா அரசு நல்ல விஷயத்தை செய்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தோஷப்படுவதாக காட்டினாலும் அவர் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லை. சிலர் சிரிப்பார். சிலர் அழுவார். ஆனால் அவர் சிரித்துக் கொண்டே அழுகின்றார். இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து