முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசால் தமிழக நிதி நிலை பாதிப்பு: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விவரிப்பு

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
Minister-2025-03-14

 சென்னை, “மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும், பேரிடர்  நிவாரணப் பணிகளுக்கு  சொற்பமான  நிதி விடுவித்ததும் மாநில அரசின் நிதி நிலையை வெகுவாகப் பாதித்துள்ளது” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். 

அப்போது தமிழக அரசின் நிதிநிலை குறித்து அவர் பேசியது: “2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2,20,895 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வணிகவரிகளின் கீழ் 1,63,930 கோடி ரூபாய், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் 26,109 கோடி ரூபாய், வாகனங்கள் மீதான வரிகளின் கீழ் 13,441 கோடி ரூபாய் மற்றும் மாநில ஆயத்தீர்வையின் கீழ் 12944 கோடி ரூபாய் வரி வருவாய் மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகும்.

ஒட்டுமொத்தமாக, 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வருவாய் மதிப்பீடான 2,49,713 கோடி ரூபாய், மொத்த வருவாய் வரவுகளில் 75.31சதவீதத்தைக் கொண்டிருக்கும். அரசின் பெருமுயற்சிகளால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்து வரும் அதே வேளையில், மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள், மத்திய வரிகளில் பங்கு ஆகியவை மொத்த வருவாய் சதவீதத்தில் குறைந்துகொண்டே வந்துள்ளன. மத்திய அரசு, ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவிக்க மறுத்ததும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய இரு தொடர் பேரிடர்களின் நிவாரணப் பணிகளுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்ததும் மாநில அரசின் நிதிநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 49,755 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மத்திய வரிகளில் பங்கு திருத்த மதிப்பீடுகளில் 52,491 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருத்த மதிப்பீடுகளில் இப்பங்கு உயர்ந்திருந்தாலும், மத்திய அரசு தொடர்ந்து அதிக அளவில் மேல் வரிகளையும், கூடுதல் கட்டணங்களையும் விதிப்பதால் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதத்தைக் கொண்டிருக்கும் நாம், தேசியப் பொருளாதார வளர்ச்சியில் 9 சதவீதப் பங்களிக்கும் அதே வேளையில், மத்திய வரிகளில் தமிழகத்துக்கான பங்கானது வெறும் 4 சதவீதம் மட்டுமே என்பது, மாநிலத்துக்கு இழைக்கப்படும் அநீதியைத் தவிர வேறெதுவும் இல்லை.

2025-26 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் வரவினங்கள் 3,31,569 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, திருத்த மதிப்பீடுகளைவிட 12.81 சதவீதம் அதிகமாகும். 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் செலவினங்கள் 3,73,204 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளைவிட 9.65 சதவீதம் வளர்ச்சி கொண்டதாகும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து