முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பாவின் முன்ஜாமீன் மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஆக.- 30 -  நில மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. கர்நாடகத்தில் முதல்வராக இருந்தபோது எடியூரப்பா நில மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுமட்டுமல்லாமல் சுரங்க ஊழலிலும் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகார்களை அடுத்து எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக சதானந்தகவுடா பொறுப்பேற்றார்.  நில மோசடி தொடர்பாக எடியூரப்பா மீது வழக்கு தொடர கர்நாடக கவர்னர் எச்.ஆர்.பரத்வாஜ் ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டார். இதையடுத்து எடியூரப்பா மீது நில மோசடி வழக்கு தொடரப்பட்டது. பெங்களூர் டெவலப்மென்ட் அத்தாரிட்டிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் எடியூரப்பா  ஊழல் செய்துள்ளதாக சிராஜின்பாஷா என்ற வழக்கறிஞர் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த புகார் மனு மீது லோக் அயுக்தா நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு கடந்த 8 ம் தேதி லோக் அயுக்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் நேரில் ஆஜராகாத எடியூரப்பா, கர்நாடக ஐகோர்ட்டில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை செய்த ஐகோர்ட்டு எடியூரப்பாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் எடியூரப்பா லோக் அயுக்தா நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்