முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஏற்பட்ட வருத்தம் - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : தினேஷ் கார்த்திக்கை ஏழாவது வரிசையில் களமிறங்கச் சொன்னதில் அவர் அப்செட் ஆனார் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் இந்தியாவும், பங்களாதேஷூம் ஃபைனலுக்கு முன்னேறின. இந்த அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, பங்களாதேஷை பேட்டிங் செய்யப் பணித்தது. இதையடுத்து அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சபீர் ரகுமான் அதிகப்பட்சமாக 77 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் சேஹல் 3 விக்கெட்டும், உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தினேஷ் கார்த்திக்...

பின்னர் ஆடிய இந்திய அணி, கடைசிக்கட்டத்தில் தடுமாறியது. போட்டி கைவிட்டுப் போய்விடும் என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். ஆட்ட நாயகன் விருது தினேஷ் கார்த்திக்கிற்கும் தொடர் நாயகன் விருது வாஷிங்டன் சுந்தருக்கும் வழங்கப்பட்டது.

அப்செட்டாகிவிட்டார்...

பின்னர் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ‘இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். அவரிடம், ‘இந்தப் போட்டியில் நீங்கள்தான் ஆட்டத்தை முடிக்க வேண்டும். கடைசி 4 ஓவர்களில் உங்கள் திறமை பயன்படும்’ என்றேன். ஏழாவது வரிசையில் களமிறங்கச் சொன்னேன். அதனால்தான் நான் அவுட் ஆனதும் அவர் இறங்க வேண்டிய இடத்தில் விஜய் சங்கர் இறங்கினார். இப்படி செய்ததில் தினேஷுக்கு வருத்தம் இருந்தது. அவர் அப்செட்டாகிவிட்டார். ஆனால், இந்த வெற்றியின் மூலம் அவர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். அவரது ஆட்டம் அவருக்கு இன்னும் நம்பிக்கையை அளித்திருக்கும்.

வாய்ப்பு கிடைக்கவில்லை

கடைசி ஓவரில் விஜய் சங்கர் அவுட்டானதும் போட்டி டிராவாகி, சூப்பர் ஓவர் நடக்கும் என நினைத்தேன். அதற்கும் தயாரும் ஆகிவிட்டேன். காலில், பேடை கட்டத் தொடங்கிவிட்டேன். அதனால் கடைசிப் பந்தை பார்க்கவில்லை. திடீரென்று டிரெஸ்சிங் ரூமில் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. பிறகுதான் தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்திருக்கிறார் என்று புரிந்துகொண்டேன். விஜய் சங்கர், இந்த தொடரில் பேட்டிங்கில் இறங்கவில்லை. அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இந்தப் போட்டியின் கடைசியில் அவருக்கு அழுத்தம் இருந்தது. அந்த நேரத்தில் களத்தில் நிற்பது எளிதான விஷயமில்லை. இந்தப் போட்டியின் மூலம் அவர் கற்றுக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன்’ என்றார்.

சிக்சர் அடித்து கலக்கினார்

பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறும்போது, ‘இந்த போட்டியில் எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இருந்தும் இந்தியா வென்றுவிட்டது. 18 மற்றும் 19 வது ஓவரை சிறந்த பந்துவீச்சாளரை கொண்டு வீச முடிவு செய்தோம். ஆனால் ருபல் பந்தில் 15 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டதும் எங்களால் கட்டுப்படுத்தமுடியவில்லை. இதற்கான புகழ் அனைத்தும் தினேஷ் கார்த்திக்கைத்தான் சேரும். சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து கலக்கினார். நாங்கள் எடுத்த 166 ரன்கள் என்பது சரியானதுதான். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் வீரர்கள் அனைவருமே சிறப்பாகச் செயல்பட்டனர். இதில் இருந்து பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக்கொண்டு தொடர்ந்து செயல்படுவோம்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து