முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் நீக்கம்

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்காவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஹெச்.ஆர். மெக்மாஸ்டரை அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்.

அவருக்குப் பதிலாக, ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜான் போல்ட்டன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச விவகாரங்களில் தனது கொள்கைக்கு எதிரான கருத்து கொண்டவர்களை முக்கியப் பதவியிலிருந்து வெளியேற்றும் டிரம்ப்பின் அதிரடி முடிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.

டிரம்ப்புக்கும், மெக்மாஸ்டருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது பதவியை மெக்மாஸ்டர் ராஜிநாமா செய்துவிட்டதாக கடந்த வாரமே தகவல்கள் வெளியாகின. எனினும், இந்தத் தகவலை மறுத்ததுடன், தேசியப் பாதுகாப்பு கவுன்சிலில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்திருந்தது.

இந்தச் சூழலில், அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை) வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவித்துள்ளதாவது:

எனது புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் போல்ட்டனை நியமிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி அவர் அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர் ஆற்றிய மிகச் சிறந்த சேவைகளுக்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பதவியிலிருந்து விலகினாலும், அவர் எனது நண்பராக எப்போதும் தொடருவார் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுட்டுரைப் பதிவுகள் வெளியான நிலையில், மெக்மாஸ்டர் தனது பதவி விலகல் கடிதத்தை வியாழக்கிழமை சமர்ப்பித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பதவி விலகும் மெக்மாஸ்டர், டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அவரால் நியமிக்கப்பட்ட இரண்டாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து